சுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ!
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் திருமண பேனர் திடீரென விழுந்ததால் பின்னால் வந்த லாரி ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், சரியான குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேனர்களை வைக்கமாட்டோம் என அரசியல்கட்சியினர் உறுதியளித்தனர். சென்னை உயர்நீதிமன்றம் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். தங்கள் ஒரே மகளின் மரணத்தால் நிலைகுலைந்து போயுள்ளதை கண்ணீருடன் அவர்கள் கூறியதை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறிய கமல் ஹாசன், சுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “இந்த பெற்றோர்களின் இழப்புக்கு ஆறுதல்கூட சொல்லமுடியாத அளவுக்கு, அவர்களின் ஒரே குழந்தை சுபஸ்ரீ. என்ன ஆறுதல் சொல்லி அவர் களை தேற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களின் சோகம், கோபமாக மாறுவதற்கு ஏதுவாக யாரும், எதுவும் சொல்லவேண்டாம் என்பது தான் என்னுடைய வேண்டு கோள். அமைச்சர்கள் , `குற்றம் எங்கள் மீது இல்லை’ என்பதை சுட்டிக்காட்டுவதை மிகத்தீவிர முயற்சியாக எடுக்க வேண்டாம் என்பது தான் என் கருத்து.
தயவு செய்து, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் எதுவும் பேசவேண்டாம். நானும் அதை திரும்பி கிளப்பி விட விரும்பவில்லை. அவர்கள் தேறி வரட்டும். அதுவரை அவர்கள் மீது எந்த குற்றத்தையும் சுமத்த வேண்டாம் என்பதை கூறிக்கொள்கிறேன். நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை, இறந்த பெண்ணின் மீது தவறு என சொல்லியிருக்க கூடாது. இனியாவது திருத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு நாடகம் போட்டு பேனர்களை அகற்றுங்கள் என சொல்வதை தவிர்த்து, இனி இந்த கலாச்சாரத்தை ஒழிக்கவேண்டும்.
ஒழியவில்லை என்றால் மக்கள் ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும். எங்கள் கட்சி சார்பாக நாங்கள் செய்யகூடாது என்பது கட்சிகாரர்கள் மட்டுமில்லாமல், சினிமாக்காரர்களும் பேனர் வைக்கவேண்டாம் என்பதை வலியுறுத்திக்கொள்கிறேன். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். ரொம்ப நாள் ஓடி ஒளிய முடியாது. குற்றத்திலிருந்து தப்பி முடியும் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.