அமெரிக்கா: கலிபோர்னியா தாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளிப் பெண் தேர்வாகி சாதனை!

அமெரிக்கா:  கலிபோர்னியா தாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளிப் பெண் தேர்வாகி சாதனை!

லிபோர்னியா அசெம்பளிக்கான 35 ஆவது தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண்ணான ஜஸ்மீட் கவுர் பெய்ன்ஸ் என்பவர் கெர்ன் என்னும் மாவட்டத்தில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பெய்ன்ஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட லெட்டிசியா செரஸ் என்கிற அமெரிக்க வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த பெயின்சின் தந்தை ஒரு கார் மெக்கானிக். கல்லூரி காலத்தில் பெயின்ஸ் தனது தந்தைக்கு உதவியாக ஒர்க்க்ஷாப்பில் வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு மருத்துவராக பட்டம் பெற்ற பின், தனியார் தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் மிகவும் பழமையான மாகாணங்களில் கலிபோர்னியாவும் ஒன்று. இந்த கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பணியாற்றியுள்ளார்.

மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் பசிபிக் கடலில் 900 மைல்கள் நீள கடற்கரையுடன் அமைந்துள்ளது கலிபோர்னியா மாகாணம். ஹாலிவுட் திரைப்படங்களின் தலைமையிடமாக உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா மாகணத்தில்தான் உள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 3.05 கோடி. அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் அதிகம் வாழும் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் சட்டசபைக்கு தேர்வாகியிருப்பது உண்மையிலேயே சாதனைதான் என்கிறார்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

இத் தேர்தலில் லெட்டிசியா 7,555 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் பெய்ன்ஸ் 10,827 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த வெற்றி மூலம் கலிபோர்னியா சட்டசபைக்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்கிற சாதனையை பெய்ன்ஸ் படைத்துள்ளார். போதைக்கு அடிமையான இளைஞர்களை மீட்கும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் மருத்துவத்துறை இயக்குநராக பணியாற்றி வரும் பெய்ன்ஸ், தனது தேர்தல் பரப்புரையின் போது, வீடற்றவர்களுக்கு வீடு கிடைக்கவும், சுகாதாரமான தண்ணீர் மற்றும் காற்று கிடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த வெற்றி தனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது எனவும், தன்னை ஆதரித்தவர்களுக்கு தான் மிகவும் கடமைப்பட்டவளாக இருப்பேன் என்றும் பெய்ன்ஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஒரு மருத்துவராக அரசியலமைப்பு அதிகாரத்துடன் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே தான் தேர்தலில் போட்டியிட்டதாக கூறும் பெயின்ஸ், கோவிட் பெருந்தொற்றின் போது முன்களப்பணியாளராக கொரோனா நோயாளிகளுக்காக பணியாற்றியுள்ளார். பெய்ன்ஸ் அவரது மருத்துவ சேவைக்காக 2019 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாண குடும்ப மருத்துவ சங்கத்தின் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts