மறைமுக தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல!- திருமா மனு தள்ளுபடி!

மறைமுக தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல!- திருமா மனு தள்ளுபடி!

அதோ இதோ என்று இழுத்துக் கொண்டே போய் ஒருவழியாக ஏதோ ஒரு ரூட்டில் நடக்க இருந்த மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை ஐகோர்ட் மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல என்று தெரிவித்து, திருமாவளவன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம், என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த நவம்பர் 19ஆம் தேதி, தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்கு தடை விதிக்க கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களாகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது எனக்கூறி பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தில், மறைமுகத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பதால், அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயக விரோதமானது என வாதிட்டார்.

அப்போது, தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென கூறுவது சட்டப்படியான உரிமைதானே (statutory rights) தவிர, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை (fundamental right) இல்லை என நீதிபதிகள் விளக்கமளித்தனர்.

எனவே, நேர்முக தேர்தலை, மறைமுக தேர்தலாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தொல். திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம், என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!