இந்திய தடகள வீராங்கனை சித்ராவுக்கு அனுமதி மறுப்பு!

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்திய வீராங்கனை சித்ராவுக்கு, சர்வதேச தடகள கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது .அண்மையில் ல் புவனேஸ்வரத்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய இளம் வீராங்கனையான கேரளாவைச் சேர்ந்த பி.யூ.சித்ரா தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் மகுடம் சூடுவோர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி லண்டனில் தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உலக தடகள போட்டிக்கான இந்திய அணிக்கு சித்ராவை இந்திய தடகள சம்மேளனம் தேர்வு செய்யவில்லை. சர்வதேச தடகள சம்மேளனம் நிர்ணயித்த தகுதி இலக்கை எட்டாததால் அவர் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பி.யூ.சித்ரா கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பி.பி.சுரேஷ்குமார் இடைக்கால தீர்ப்பில், சித்ராவை இந்திய அணியில் சேர்த்து உலக தடகள போட்டியில் விளையாட வைக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை மத்திய அரசும், இந்திய தடகள சம்மேளனமும், இந்திய விளையாட்டு ஆணையமும் செய்யும்படி உத்தரவிட்டார். சர்வதேச தடகள சம்மேளனம் நிர்ணயித்த இலக்கை நெருங்காதவர்கள் கூட இந்திய அணியில் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிவதாக தனது தீர்ப்பில் அவர் சுட்டிகாட்டி இருந்தார். இப்படி கேரள ஐகோர்ட் தலையிட்டு இவருக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டதையடுத்து. மத்திய விளையாட்டுத்துறையும் சித்ராவை அணியில் இணைக்க இந்திய தடகள கூட்டமைப்புக்கு வலியுறுத்தி இருந்தது. ஆனால், சித்ராவுக்கு வாய்ப்பு கிடைப்பது சர்வதேச தடகள கூட்டமைப்பின் (ஐ.ஏ.ஏ.எப்.,) கையில் இருந்தது. இந்நிலையில், இவருக்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று ஐ.ஏ.ஏ.எப்., கூரி விட்டது.