தோழர் நல்லக்கண்ணுக்குப் பிறந்தநாள்! by பெ கருணாகரன்

தோழர் நல்லக்கண்ணுக்குப் பிறந்தநாள்! by பெ கருணாகரன்

கறுப்புத் தங்கம்; சிவப்புச் சிங்கம்! _ அதுதான் தோழர் ஆர். நல்லகண்ணு. 1925 டிசம்பரில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட அதே வருடம் அதே மாதத்தில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். பெற்றோர், ராமசாமி – கருப்பாயி.பள்ளி நாட்களிலேயே விடுதலை உணர்வு நெருப்பாய் தகிக்க, பாரதி பாடல்களைப் பாடியபடி சக மாணவர்களுடன் போராட்டக் களத்தில் குதித்தார்.

தொடக்கத்தில் காந்திய வழியில் சென்ற இவரது சிந்தனை, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போன்றோரின் பொதுவுடமை, சமத்துவம் பற்றிய கருத்தாழமிக்கப் பேச்சுக்களைக் கேட்டு, நிறம் மாறியது. தேசிய தத்துவம் பொதுவுடமை தத்துவமாய் உருமாறியது.

காந்தியின் கைத்தடியைவிட, இங்கிருக்கும் நிலவுடைமையாளர்களின் குண்டாந் தடிகளுக்குத்தான் வலு அதிகம் என்பதை உணர்ந்தார் நல்லகண்ணு.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, சுதந்திர தினத்துக்கும் குடியரசு அறிவிப்புக்கும் இடைப்பட்ட காலம் சோதனை மிகுந்தது. பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள்… விவசாயிகள் பலி… இதனை எதிர்த்து ஆயுதமேந்திய போராட்டங்கள் வெடித்தன. கம்யூனிஸ்ட் இயக்கம் இதற்குத் தலைமை தாங்கியது.

இதனால் 1948_ம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது. முக்கிய தலைவர்கள் தலைமை மறைவு வாழ்க்கை மேற்கொண்டு போராட்டத்தை வழிநடத்தினர். இந்தக் காலகட்டத்தில் நல்லகண்ணு கிராமம் கிராமமாகச் சென்றார். விவசாயிகளைச் சந்தித்து வெப்பமேற்றினார். பகலில் தோழர்களுடன் சந்திப்பு… இரவில் கிடைக்குமிடத்தில் ஓய்வு.

வீரம்!

1949, டிசம்பர் 20ம் தேதி. திருநெல்வேலி மாவட்டத்தில் புலியூர்க்குறிச்சி என்ற ஊரில், தலித் தோழர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்புக்கு வெடிகுண்டுகளுடன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் நல்லகண்ணு. சுற்றி வளைத்தது போலீஸ். நல்லகண்ணு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரிடமிருந்து வந்த ஒரே பதில் ‘தெரியாது’ மட்டும்தான்.

இன்ஸ்பெக்டர், தனது கனத்த பூட்ஸ் கால்களால் அவரது கால்களில் ஏறி மிதிக்கிறார். வலியில் துடித்த போதும், நல்லகண்ணுவிடமிருந்து தொடர்ந்து வெளிவந்த பதில் ‘தெரியாது’.

பொறுமையிழந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டைப் பற்ற வைத்தார். குனிந்தார். சிகரெட் நெருப்பை தோழரின் மீசையில் வைத்து அழுத்தினார். நல்லகண்ணு வலியால் துடித்தார். மீசை கருகி, நெருப்பு சதையையும் பொசுக்க ஆரம்பித்தது. ஆனால், அந்த இரும்பு மனிதரிடமிருந்து போலீஸ§க்குத் தேவையான ஒரு பதிலும் வந்து சேரவில்லை.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் நல்லகண்ணு மீசைக்கு விடை கொடுத்தார். மீசை வீரத்தின் அடையாளம் என்பார்கள். தோழருக்கு வீரத்தின் அடையாளம் மீசையல்ல; அவரது துணிச்சலான மனசல்லவா!

கைது செய்யப்பட்ட நல்லகண்ணு சிறையிலடைக்கப்பட்டார். அவர் உட்பட 95 பேர் மீது நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. இதில் 11 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம். நல்லகண்ணு வெடிகுண்டு வைத்திருந்ததால் ஆயுள் தண்டனையுடன் மேலும் ஆறு வருட சிறைத்தண்டனை. பின்னர் வந்த ராஜாஜி அரசு ஆயுள் தண்டனையை ரத்து செய்து மற்றவர்களை விடுவித்தது. ஆனால், வெடி மருந்துச் சட்டத்தின் கீழ் நல்லகண்ணு தண்டிக்கப்பட்டதை மட்டும் திரும்பப் பெற முடியாதென்று கூறிவிட்டதால், 1951லிருந்து 1956 வரை ஏழாண்டு காலம் சிறைவாசம்.

சிறையை அவர் தண்டனைக் கூடமாக நினைக்கவில்லை. பள்ளிக்கூடமாய் நினைத்தார். ஏராளமான புத்தகங்கள் படிக்க, படிக்க, அவரது சிவப்புச் சிந்தனை மேலும் அடர்த்தியானது. சிறையிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் ஜனசக்தியில் வெளிவந்து தோழர்களுக்கு எழுச்சியூட்டின. 1956 டிசம்பர் மாதம் சிங்கம் சிறையிலிருந்து வெளியே வந்தது.

‘பதவி வரும்போது, பணிவு வர வேண்டும்; துணிவும் வர வேண்டும் தோழ!’ என்பது பாடலென்றால், பணிவும் துணிவும் இருந்ததால் இந்தத் தோழருக்கு கட்சியில் பல பதவிகள், பொறுப்புகள் தேடி வந்தன.

நிதானம்!

1980_களின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதிகளில் பெரிய வகுப்புக் கலவரம் வெடித்துக் கிளப்பியது. பல இடங்களில் கொலை, கொள்ளை… இந்த நிலையில், கலவரத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டுமென்பதற்காக, சர்வகட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தலைவர்களும் சுற்றுப்பயணம் செய்து இருதரப்பு ஜாதியினரையும் சந்தித்து, சமரசப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்துவது என்று முடிவானது.

இந்தச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க நல்லகண்ணு .சென்னையிலிருந்து நெல்லை வந்து சேர்ந்தார். அதே நேரம் அமைதி திரும்பி விடுமோ என்று நடுங்கிய கலவரக்காரர்கள், கலவர வெப்பம் குறைந்துவிடக் கூடாதென்பதற்காக நல்லகண்ணுவின் வயோதிக மாமனார் அன்னசாமியைக் கொடூரமாய்க் கொன்றனர்.

தோழர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப்போய்விடுவார் என்று பலர் நினைக்க… அதற்கு மாறாக, சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டபடி நிகழ்த்தினார். காவல் துறையினர், ‘இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்குச் சென்றால், மேலும் கலவரம் பெரிதாகும்’’ என்று அச்சம் தெரிவித்த போதும், அதை ஒதுக்கி விட்டு சுற்றுப்பயணத்தை அஞ்சாமல் மேற்கொண்டார். அமைதியை வலியுறுத்தினார்.

‘‘மாமா அப்பகுதியில் தொடர்ந்து வசித்து வருகிறார். அப்பகுதியைச் சார்ந்த தலித்துகள் நிச்சயம் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஒருவேளை மோதலை வளர்க்கவேண்டுமென விரும்பி, ஆதிக்கம் செலுத்த விரும்புவோரே இதனைச் செய்து தலித்துகள் வெட்டி விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார். மாமனார் கொலை செய்யப்பட்டதற்கு உணர்ச்சிவயப்பட்டு அவர் பொங்கியிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். மாறாக, அவர் நிதானத்தைக் கடைப்பிடித்தது உணர்ச்சிவயப்படாத தலைமையின் அடையாளம்!

பொறுமை!

நல்லகண்ணு கோபப்படவேமாட்டார். அதற்கு அவர் கூறும் காரணம். ‘கோபமாகப் பேசி, பிறரை ஏன் துன்புறுத்த வேண்டும்? பிறர் மனம் புண்படக் கூடாது’

ஆனால், இவருக்கும் கோபம் வரும். உயிராக நினைக்கும் கட்சியை யாரேனும் கடுமையாய் விமர்சிக்கும்போது.

இருபதாண்டுகளுக்கு முன் திருப்பத்தூர் இடைத்தேர்தல். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. ஒரு காரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி, தரக் குறைவான முறையில் பிரசாரம் செய்து கொண்டு போனார்கள். காவல் துறையிடம் முறையிட்டும் பயனில்லை. நல்லகண்ணுதான் அங்கு தேர்தல் பொறுப்பேற்றிருந்தார்.

மோசமான அந்தப் பிரசாரத்தால் பொறுமையிழந்து கோபமடைந்த நல்லகண்ணு இளைஞர்களை அழைத்து அந்த காரை தடுத்து நிறுத்தும்படி கூறியதுடன், தானும் கையில் ஒரு கம்பை எடுத்துக் கொண்டு பாய்ந்தார். பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்ட பிறகுதான் அவரது கோபம் தணிந்தது.

தோழர்கள் பணம்!

கட்சிப் பணம் அநாவசியமாய்ச் செலவு செய்யப்படுவதை இவரால் சகிக்க முடியாது. பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து அம்பத்தூர் திருமுல்லைவாயிலுக்கு இவர் வீட்டை மாற்றிய பிறகு ரயிலிலேயே சென்று வந்தார். எல்லாத் தோழர்களும் காரில் போகச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் ‘என் ஒருவனுக்காக மட்டுமே இவ்வளவு தூரம் காரில் சென்று வந்தால், நிறைய செலவாகிறதே. பணம் என்ன கொட்டியா கிடக்கு? நம்ம ஏழைத் தோழர்கள் ஒவ்வொரு ரூபாயா சேர்த்துக் கொடுக்கற நிதியை இப்படி விரயம் செய்யக் கூடாது’ என்று கூறி மறுத்து விட்டார். ஆனால், ரயில் பயணம் கொஞ்சநாள்தான். அப்புறம் காரில் போக ஆரம்பித்தார். ரயிலில் போகும்போது பலர் அவரது காலில் விழுந்து வணங்கி சங்கடப்படுத்துகிறார்களாம்.

இன்னொரு முகம்!

பார்க்க ஒரு கிராமத்தான் போல தோற்றம். ஆனால், பேச ஆரம்பித்தாலோ இவரது இன்னொரு தோற்றம் பிடிபட்டு வியக்க வைக்கும். சிவப்புச் சித்தாந்தத்தைப் போலவே இவருக்கு இலக்கியத்தின் மீதும் அலாதி காதல் உண்டு. சங்க இலக்கியத்திலிருந்து சமீப இலக்கியம் வரை இவருக்கு அத்துப்படி. ஆங்கில மொழியில் புலமை; தேர்ந்த பேச்சாற்றல்; படைப்புத்திறன் இவையெல்லாம் நல்லகண்ணுவின் இன்னொரு முகங்கள்.

பாரதியின் கவிதைகள் பள்ளி நாட்களிலிருந்தே இவர் இதயம் கவர்ந்தவை. இப்போது கூட, நல்லகண்ணு பேசும் போது, பாரதி கவிதைகளை மேற்கோள் காட்டுவார். திராவிடக் கவிஞர் என்று பாரதிதாசனை காம்ரேட்டுகள் தள்ளி வைத்த போதும், இலக்கியச் சுவை மிகுந்த அவரது புரட்சிப் பாடல்கள் நல்லகண்ணுவின் நெஞ்சு கவர்ந்தவை.

எளிமை!

கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக வெளியூர்களுக்குச் சென்றால், கையில் ஒரு துணி பை மட்டும்தான். அதில் மாற்றுக்கு உடை இருக்கும். பெரும்பாலும் கட்சி ஆபீஸ்களிலேயே தங்கி விடுவார். வெளியில் வாடகை அறைகளில் தங்க ஒப்புக்கொள்ள மாட்டார். அங்கேயே தனது அழுக்குத் துணிகளைத் தானே துவைத்து காயவைத்து மடித்து தலையணைக்குக் கீழே வைத்து தூங்குவார். காலையில் எழுந்து பார்த்தால் அயர்ன் செய்த சட்டை ரெடி!

ஒரு முறை நல்லகண்ணு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ‘‘என் குடும்பத்துக்கு நான் பொருளாதார ரீதியில் எந்த உதவியும் செய்ததில்லை. அளப்பரிய அன்பை மட்டுமே செலுத்தியுள்ளேன். அவர்களும் எதையும் எதிர்பார்க்காமல் என்மீது அன்பு செலுத்தி வருகிறார்கள்…’’

ரெட் சல்யூட்!

அரசியலுக்கு வந்து அறுபதாண்டுகளுக்கு மேலாகியும் நல்லகண்ணுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது என்பது தெரியுமா? அவர் இப்போது வசித்துக் கொண்டிருப்பது தனது மகள் டாக்டர் ஆண்டாளின் வீட்டில்.

நினைப்பெல்லாம் கட்சி, தோழர்கள், போராட்டம் என்றே இருந்ததால், பணம் சேர்க்கும் நினைப்பே தோழருக்கு வரவில்லை போலும். அவரது எண்பதாவது வயது நிறைவு விழாவில் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. ‘எனக்கெதுக்கு பணம்? கட்சி நிதிக்கு அதைக் கொடுத்துடறேன்’ என்று சர்வ சாதாரணமாகக் கூறிய அந்த உயர்ந்த, ஒப்பில்லாத, தங்கமான மனசு யாருக்கு வரும்?

அந்தக் கறுப்பு காம்ரேட்டுக்கு நமது ரெட் சல்யூட்!

‘குற்றாலம் அருவியிலே ஜீவா
குளித்து நிற்கையிலே
வற்றாத தமிழ்க் கடலும்
வந்து நிற்குதென்பேன்
வற்றாத தமிழ்க் கடலும்
வறண்ட விறகாகி
பற்றி எரியக் கண்டேன்
பார்த்த மனம் பதறுதய்யா’

(ஜீவா எரியூட்டப்பட்ட பிறகு நல்லகண்ணு
எழுதிய கவிதை)

பெ. கருணாகரன்

Related Posts

error: Content is protected !!