அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!- தமிழக அரசு அறிவிப்பு.
![அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!- தமிழக அரசு அறிவிப்பு.](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/04/tn-co-apr-22a.jpg)
வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. எனவே, முக்கிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் (Hotels), உணவகங்கள் (Restaurants) போன்றவை தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படுவதுடன். ஏற்கெனவே அறிவித்தபடி இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக்கழக அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி இலவசமாக வழங்க, இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1 தேதி முதல் நடத்தப்படும்.
அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.