காஷ்மீரில் என்கவுண்டர்:3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!

காஷ்மீரில் என்கவுண்டர்:3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஜம்மு–காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதல் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து இன்று காலை வரை நீட்டித்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு தொடர்பு குறித்து கண்டறியப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நடந்த தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டரில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததை உணர்ந்த தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்கள் நாயப் சுபேதார் விபன் குமா மற்றும் சிப்பாய் அரவிந்த் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 2 வீரர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் பிரம்மாண்ட பிரச்சாரப் பேரணி மேற்கொள்ள விருக்கும் நிலையில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

error: Content is protected !!