பேரழிவு விளிம்பில் பூமி: 1.5°C இலக்கு கைவிடப்படுகிறதா? – COP30 மாநாட்டின் அலசல்!
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றச் சட்டக் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) 30வது பங்குதாரர்கள் மாநாடு (COP30), அமேசான் மழைக்காடுகளுக்கு அருகில் உள்ள பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நவம்பர் 10 முதல் 21 வரை நடைபெற்றது. புவி வெப்பமயமாதல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏன் உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், இதன் விளைவுகள் என்னென்ன என்பதை இந்தச் சிறப்புக் கட்டுரை அலசுகிறது.
COP30 எங்கே நடந்தது? அதன் முக்கியத்துவம் என்ன?
COP30 மாநாடு, உலகின் மிக முக்கியமான சூழலியல் மையங்களில் ஒன்றான அமேசான் பகுதிக்கு அருகில் நடைபெற்றது. இதன் நோக்கம், பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான 1.5°C வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான செயல்திட்டங்களை (Implementation) உருவாக்குவதாகும்.

இந்தியாவின் நிலைப்பாடு காலநிலை நீதியையும், தகவமைப்புக்கான நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வலியுறுத்துவதையும் முன்னிறுத்தியது.
COP30 மாநாட்டில் நிகழ்ந்த நல்லது (The Good)
மாநாடு பெருமளவில் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், சில முக்கிய அம்சங்கள் நம்பிக்கையை அளித்துள்ளன:
-
அமேசான் கவனம்: அமேசான் காடுகள் அழிப்பு மற்றும் சட்டவிரோதச் சுரங்கத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் நேரடியாக உலக அரங்கிற்குக் கொண்டுவரப்பட்டன. காடுகளைப் பாதுகாப்பதற்காக வெப்பமண்டல நாடுகளுக்கு நிதி அளிக்கும் பலதரப்பு நிதிப் பொறிமுறையான “வெப்பமண்டல வன ஃபாரெவர் ஃபண்ட்” போன்ற முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன.
-
தரவு மற்றும் ஒருங்கிணைப்பு: காலநிலை நடவடிக்கைகளை அளவிடக்கூடிய முன்னேற்றமாக மாற்ற, தரநிலைகளை (Standards) harmonisation செய்வது குறித்து விவாதங்கள் நடந்தன. அளவீடு மற்றும் பொறுப்புக்கூறலுக்கு நம்பகமான கட்டமைப்பை உருவாக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முயன்றன.
-
வளர்ச்சியடைந்த இந்தியாவின் அழுத்தம்: சமத்துவம், தகவமைப்பு நிதி மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தியது. காலநிலை நிதிக்கான புதிய கூட்டு அளவு இலக்கு (NCQG) “கடன் உருவாக்காத நிதியை” உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா வலுவாகக் கோரியது.
-
செயல்பாட்டாளர்கள்: மாநாட்டின் உள்ளேயும் வெளியேயும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மற்றும் பூர்வகுடி மக்கள் தங்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினர்.
COP30 மாநாட்டில் நிகழ்ந்த கெட்டது (The Bad)
முந்தைய மாநாடுகளைப் போலவே, COP30 மாநாடும் பல முக்கியத் தோல்விகளை எதிர்கொண்டது:
-
ஒற்றுமை இல்லாத நிலை: பல நாடுகளுக்கிடையே, குறிப்பாக நிதி மற்றும் புதைபடிம எரிபொருட்களை படிப்படியாகக் கைவிடுவது குறித்த இலக்குகளில் ஒற்றுமையின்மை (Lack of Unity) காணப்பட்டது.
-
முன்னேற்றமின்மை: உமிழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக வெப்பநிலையை 1.5°C-க்குள் கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கான உறுதியான பாதை வரைபடம் (Roadmap) உருவாக்கப்படவில்லை.
-
நிதிப் பற்றாக்குறை: காலநிலை நிதிக்கான புதிய கூட்டு இலக்கு (NCQG) அமைக்கப்பட்டாலும், வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தேவையான டிரில்லியன் கணக்கான டாலர்களில் ஒரு பகுதியைக் கூட வழங்குவதில் வளர்ந்த நாடுகள் தோல்வியடைந்தன. இதனால் நிதி, கடனை உருவாக்காத நிதியாக இல்லாமல், பெரும்பாலும் கடன் சுமையாக மாறும் அபாயம் உள்ளது.
-
லாபியிஸ்ட்டுகளின் ஆதிக்கம்: மாநாடுகளில் புதைபடிம எரிபொருள் லாபியிஸ்ட்டுகள் அதிக அளவில் பங்கேற்பதாகவும், இது உண்மையான காலநிலை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மன்னிக்க முடியாதவை (The Unforgivable)
சில அரசியல் ரீதியான நிலைப்பாடுகள் மற்றும் மாநாட்டின் செயல்முறைகள் மன்னிக்க முடியாத தோல்விகளாகப் பார்க்கப்படுகின்றன:
-
புதைபடிம எரிபொருள் மௌனம்: மாநாட்டை ஏற்று நடத்தும் பிரேசில் கொண்டுவந்த புதிய வரைவு உடன்பாட்டில், புதைபடிம எரிபொருட்களை (Fossil Fuels) படிப்படியாகக் கைவிடுவது பற்றி தெளிவாகக் குறிப்பிடாதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது மாநாட்டின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்ததாகக் கருதப்படுகிறது.
-
ஒழுங்கின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மை: காலநிலை நீதிக்கான ஆலோசகர்கள், இந்த மாநாட்டின் செயல்முறைகள் தெளிவின்றி இருப்பதாகவும், பில்லியன் கணக்கான மக்களின் மனித உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையில் வளர்ந்த நாடுகள் முடிவுகளைத் திணிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
-
காலக்கெடுவை மீறுதல்: 1.5°C இலக்கு விரைவில் மீறப்படும் என ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் “லாபத்தை விட மக்களை மேலாக” வைக்கத் தவறியது, உண்மையான நெருக்கடிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஏன் கவலைப்பட வேண்டும்?
புவி வெப்பமயமாதல் என்பது அறிவியல் விவாதம் மட்டுமல்ல; அது நமது வேளாண்மை, உணவு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனித வாழ்வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு நெருக்கடி நிலை. COP30 மாநாடுகள் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும், அதன் நேரடி விளைவுகளான காட்டுத்தீ, வெள்ளம், வறட்சி, மற்றும் சூறாவளித் தாக்குதல்கள் ஆகியவை இந்தியா போன்ற பாதிக்கப்படக்கூடிய நாடுகளில்தான் அதிகம் நிகழும். எனவே, இந்த மாநாடுகளின் முடிவுகள் உங்கள் எதிர்காலத்தின் மீதான ஒரு நேரடியான தாக்கமாகும்.
நிலவளம் ரெங்கராஜ்


