திரௌபதி 2: முகமது பின் துக்ளக்காக மிரட்ட வரும் சிராக் ஜானி!
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக, படத்தில் இடம்பெறும் மூன்று வில்லன் கதாபாத்திரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த வரலாற்று ஆக்ஷன் திரைப்படம், 14ஆம் நூற்றாண்டு தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பட வர்த்தக வட்டாரத்திலும் ‘திரௌபதி 2’ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து, சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

நாயகன் ரிச்சர்ட் ரிஷியின் வசீகரமான தோற்றம், கண்ணை கவரும் பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை திரைப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ள நிலையில், படத்தில் இடம்பெறும் மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி அறிமுகமாகிறார்.
இதுகுறித்து இயக்குநர் மோகன் ஜி கூறியதாவது:
“முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார். அவர் வெறும் வில்லனாக மட்டும் இல்லாமல், புத்திசாலித்தனம் நிறைந்த தனது முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் மனிதராக வருகிறார்.
உடல் ரீதியாக வலுவாகவும், அதே சமயம் அறிவார்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தக்கூடிய நடிகரை நாங்கள் தேடினோம். வரலாற்றில் துக்ளக் ‘புத்திசாலியான முட்டாள்’ என வர்ணிக்கப்படுகிறார். அந்த முரண்பாட்டை திரையில் வெளிப்படுத்துவது மிகப் பெரிய சவால்.
சிராக் ஜானி அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான ஆழத்தை முழுமையாக வழங்கியுள்ளார். அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்” என்றார்.
இந்த திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன்
Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில்
பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு),
ஜிப்ரான் வைபோதா (இசை),
ஆக்ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்),
தணிகா டோனி (நடன அமைப்பு),
தேவராஜ் (எடிட்டிங்),
கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.
சென்சார் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்படவுள்ள நிலையில், அதன் பின்னர் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


