நாய்கடியும், ரேபிஸூம் – கொஞ்சம் எச்சரிக்கை & கொஞ்சம் விளக்கம்!

நேற்று தெரிந்த பாட்டி ஒருவர் ,தன்னை தெரு நாய் கடித்து விட்டதாகவும் அதற்கு உணவுப் பத்தியம் ஏதேனும் உண்டா என்று கேட்டார்.
“இல்லை பாட்டி..உணவுப் பத்தியம் ஏதுமில்லை .. நான்கு நாட்கள் மட்டும் சரியாக ஊசி போடணும். மத்தபடி கறி மட்டன் மீன்னு சாப்டலாம் பிரச்சனை இல்லை”
“ஊசி கரெக்ட்டா போட்டுட்றேன் ., ஆனா அசைவம் சாப்டாம இருந்துக்குறேன்யா.. அதான் நல்லது”
“சரி உங்க இஷ்டம் பாட்டி”. பாட்டி தனது காலில் தெருநாய் கடித்தவுடன் அரசு மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்திருக்கிறார். மருத்துவர் சோப் போட்டு பதினைந்து நிமிடங்கள் நன்றாக கடிபட்ட இடத்தைத் தேய்த்துக் கழுவி விட்டு வர சொல்லியிருக்கிறார். இது தான் முதல் மற்றும் முக்கியமான சிகிச்சை. இதன் மூலம் கடிபட்ட இடத்தில் இருக்கும் ரேபிஸ் வைரஸ் இறந்து போகும். அதற்கடுத்தப் படியாக டெடானஸ் ஊசி போடப்பட்டுள்ளது. அதற்கடுத்து ,கடித்த இடத்தில் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி போடப்பட்டது. இரண்டு கைகளின் தோள் பகுதியிலும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
கடித்த நாள்/ ஊசி போடப்பட்ட
“0” நாள்
“மூன்றாவது” நாள்
“ஏழாவது ” நாள்
“இருபத்திஎட்டாவது” நாள்
ஆகிய நான்கு நாட்கள் தவறாமல் ஊசி போட வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நாய்க்கடியால் பாதசாரிகளும் பைக் ஓட்டுபவர்களும் காலை நேரங்களில் நடை பயிற்சி செல்பவர்களும் வீட்டை விட்டு வெளியே வந்து வாசல் கோலம் போட வரும் மகளிர்,பள்ளிக்குச் செல்லும் சிறார் சிறுமியர் என தினந்தோறும் நாய்க்கடிக்கு உள்ளாகும் தெரிந்தோர் தெரியாதோரின் கதைகளைக் கேட்கும் போது ஒரு நாள் நாமும் இது போன்ற நாயால் கடிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மனம் அச்சப்படுவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் நமது வீடுகள் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் தினந்தோறும் கவனிப்பாரற்று வீதியில் உலவும் நாய்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.
ஒரு நாய் தனது பத்து முதல் பதினைந்து வருட வாழ்நாளில் ,நூறு நாய்களை உருவாக்கும் தன்மையுடன் உள்ளது. மனிதப் பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்பட்டாலும் கர்ப்ப காலம் என்பது பத்து மாதங்கள் . அதுவே பெண் நாய்க்கு ஈஸ்ட்ரஸ் சைக்கிள் எனும் விடாய் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.எனினும் நாய்களின் கர்ப்ப காலம் – அறுபது நாட்களே ஆகும். ஒரு முறை கர்ப்பமாகும் போதும் ,பெண் நாய் எட்டு முதல் பத்து குட்டிகளை ஈனும்.மீண்டும் அடுத்த ஆறு மாதங்களில் அடுத்த முறை கர்ப்பமாகத் தயாராகிவிடும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை “ஹீட்” எனும் காலத்தில் பெண் நாய்களின் உடலில் இருந்து சுரக்கும் ஃபிரமோன்களை ஆண் நாய்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் மோப்பம் பிடித்து வந்து விடும். இந்த ஹீட் என்பது சுமார் ஒன்பது நாட்கள் நீடிக்கும்.
அப்போது பல ஆண் நாய்களைத் தன்னுடன் புணர பெண் நாய் அனுமதிக்கும். பல ஆண் நாய்களின் விந்தணுக்கள் தொடர்ந்து யோனிக்குள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் புணரப்படுவதால் கிட்டத்தட்ட “100% கர்ப்பமாகிவிடும்” . எனவே ஒரு பெண் நாய் ஒரு வருட காலத்தில் பதினைந்து முதல் இருபது நாய்களை ஈன்றெடுத்துவிடும். அதில் பத்து முதல் பனிரெண்டு குட்டிகளைக் காப்பாற்றி விடும். இவ்வாறு தான் கவனிப்பாரற்று சுற்றும் நாய்களின் ( தெரு நாய்கள்) தொகை பெருகிக் கொண்டு செல்கிறது.
சரி அது பாட்டுக்கு பெருகிக் கொண்டே இருப்பதால் மனித இனத்திற்கு என்ன பிரச்சனை? நாய்களிடையே ரேபிஸ் எனும் உயிர்க்கொல்லித் தொற்றைப் பரப்பும் வைரஸ் அதிகமாகக் காணப்படுகிறது. அவை நாய்களுக்கிடையே பரவுகிறது. இத்தகைய வைரஸ் தொற்று நாய்களுக்கு ஏற்படும் போது ,அவை சுற்றித் திரியும் மற்ற நாய்களையும் மனிதர்களையும் கால்நடைகளையும் பூனைகளையும் கடிக்கும் போது ரேபிஸ் தொற்று பரவுகிறது. ரேபிஸ் தொற்று நோயாக ஏற்பட்டால் 100% மரணம் தான் எனும் சூழ்நிலையில் நம்மைச் சுற்றித் திரியும் தெருநாய்களில் எந்த நாய்க்கு எப்போது ரேபிஸ் ஏற்படும் ? எப்போது அது நம்மைக் கடிக்கும் ? என்று அறிய முடியாத சூழ்நிலை திகிலை வரவழைக்கிறது. ரேபிஸ் ஏற்பட்ட வெறி நாய் ,பெரும்பாலும் எந்த வித தூண்டுதலும் இல்லாமல் தான் எதிர்காணும் அனைத்தையும் கடிக்கும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் ரேபிஸினால் ஏற்படும் உயிரிழப்புகளை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது?
நாய்களைப் பூனைகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்ப்பவர்களுக்குசட்டப்படி கட்டுப்பாடுகள் கொண்டு வந்து , அவற்றுக்குள்ள உரிமத்தை வழங்கி அவர்கள் வளர்ப்புப் பிராணிகளை தங்களது இல்லங்களுக்குள் முறையாகப் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த நாய்கள் மூலம் வேறு யாருக்கேனும் பாதிப்புகள் உள்ளாகும் போது சட்டப்படி அந்த பாதிப்புகளுக்கு அவர்கள் பொறுப்பேற்கும் நிலையும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.தற்போது ஐபிசி 291இன் படி ஆயிரம் ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறையும் விதிக்கப்பட வழிவகை இருக்கிறது. உலகம் முழுவதும் நாய்கள் மூலம் ரேபிஸ் பரவலை இல்லாமல் செய்த நாடுகளில் “ஒன் ஹெல்த்” ( ஒரே நலம் ) எனும் கொள்கை கையாளப்பட்டுள்ளது. அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மனிதர்களின் நலனை மட்டும் கணக்கில் கொண்டால் பத்தாது. மனிதர்களின் நலம் ,விலங்குகளின் நலம்,சுற்றுப்புறச் சூழலின் நலம் ஆகிய மூன்றையும் ஒன்றாய் பாவித்து அதற்கேற்றாற் போல கொள்கை வகுப்பதே ஒரே நலக்கொள்கையின் அடிப்படை.
இந்த வகையில் நாய்களிடையே ரேபிஸ் வைரஸ் பரவாமல் இருந்தால் தான் மனிதர்களிடையே அது பரவாமல் இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையாக வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்களை தெரு/ வார்டு / கிராமம் வாரியாகக் கணக்கெடுப்பு செய்து அவற்றுக்குரேபிஸ் தடுப்பூசி வழங்க வேண்டும். இந்த தடுப்பூசி கவரேஜ் தொடர்ந்து எப்போதும் 70% க்கு மேல் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதாவது ,ஒரு தெருவில் இப்போது பத்து நாய்கள் இருந்தால் ( வளர்ப்பு + தெரு நாய்கள்) அதில் கட்டாயம் ஏழு முதல் எட்டு நாய்களுக்காவது ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வருடம் ஒரு முறை அந்த ஏரியா நாய்கள் அனைத்துக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் ,அந்த ஏரியாவில் முந்தைய வருடம் பத்து நாய்கள் இருந்திருக்கலாம். அதில் நான்கு பெண் நாய்கள் + ஆறு ஆண் நாய்கள் இருக்கிறது என்று கொண்டால் அடுத்த வருடம் அதே தெருவில் அந்த நான்கு பெண் நாய்களும் ,கூட்டாக ஆளுக்கு ஐந்து குட்டி என்று வைத்துக் கொண்டாலும் இன்னும் இருபது நாய்கள் அதிகமாகி இருக்கும்.எனவே அடுத்த வருடம் தடுப்பூசி போடச் செல்லும் போது ,ஏற்கனவே தடுப்பூசி போட்ட பழைய நாய்களுடன் தற்போது இந்த வருடம் புதிதாக இணைந்த இருபது நாய்களுக்கும் சேர்த்து ஊசி போட வேண்டும். கவரேஜ் 70-80% இருக்க வேண்டும். இவ்வாறு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கட்டுப்படுத்த ,ஆண் நாய்களுக்கும் பெண் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளான நாய் கண்டறியப்பட்டால் அதன் மூலம் பிற விலங்குகளுக்கு மனிதர்களுக்குத் தொற்றுப் பரவலைத் தடுக்க விலங்கியல் மருத்துவர் சான்றுடன் அவர் மேற்பார்வையில் கருணைக்கொலை செய்யப்படுகின்றன. இன்னும் சுற்றுப்புறச் சூழலைப் பொருத்தவரை ,நாம் வெளியிடங்களில் கொட்டும் குப்பைகளை நம்பியே தெரு நாய்கள் ஜீவணம் செய்கின்றன. நாம் வீட்டுக் குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் முறையாக அப்புறப்படுத்தினால் தெரு நாய்களின் எண்ணிக்கையை மறைமுகமாகக் கட்டுப்படுத்தலாம். அதே போல ,பல தொண்டு நிறுவனங்களும் விலங்கு நல ஆர்லவலர்களும் தெருநாய்களுக்கு உணவு அளிக்கிறார்கள். அதை பலரும் கேலி செய்வதும் , உணவு வழங்குபவர்கள் மீது வன்முறையைப் பிரயோகம் செய்வ கண்டிக்கத்தக்கவை.ஒரு பசித்த உயிருக்கு உணவு அளிப்பது என்பது நற்செயலே ஆகும். எனினும் உணவளிப்போர்,நாய்களுக்கு உணவளிக்கும் போது தங்களின் பாதுகாப்பு மற்றும் தாங்கள் வசிக்கும் பகுதி மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நாய்களுக்கு உணவளித்த பெண்மணி ஒருவர் ரேபிஸ் வந்து மரணமடைந்தார். மேலும் உணவளிக்கும் பகுதி மக்கள் பெரிதாக நடமாட்டம் இல்லாத பகுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கடுத்த படியாக மனிதர்களுக்கு ரேபிஸ் பரவாமல் தடுக்க நாய்க்கடி ஏற்பட்டவர்கள் கட்டாயம்.நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி பெற வேண்டும். கடித்த அல்லது நகத்தால் பிராண்டிய இடத்தில் ரத்தம் வந்து விட்டால் கட்டாயம் இம்யூனோகுளோபுளின் போடப்பட வேண்டும். இதற்குரிய விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட வேண்டும்.
தெரு நாய்களைக் கொல்வதன் மூலமோஅல்லது அதற்கு உணவு புகட்டுவோரை அடிப்பதன் மூலமோ நாம் நினைக்கும் தீர்வை எட்ட இயலாது. மேற்கூறிய பல விசயங்களையும் கருத்தில் கொண்டு கொள்கை முடிவுகளை வகுத்து அரசும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும் தொடர்ந்து முயற்சி செய்தால் 2030 இல் நமது இலக்கான நாய்கள் மற்றும் மனிதர்களிடையே ரேபிஸ் தொற்று பரவலைத் தடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை