கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன் 15-ல் முப்பெரும் விழா – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!.

கோவை கொடிசியா மைதானத்தில்  ஜூன் 15-ல் முப்பெரும் விழா – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி. நான்கு முனை போட்டி நிலவிய நிலையில், 40க்கு 40 என சொல்லி அடித்துள்ளது திமுக. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளதை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. கோவை, செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் முப்பெரும் விழா நடத்த ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் கொடீசியா மைதானத்தில் ஜூன் 15 ஆம் தேதி முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8ம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட” த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற முதலமைச்சர், கழகத் தலைவர், அவர்களுக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14ம் தேதிக்கு பதிலாக “ஜூன்-15ம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது.

முதல்வர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!