அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவிப்பு!

அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவிப்பு!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,`எல்.கே. அத்வானி-ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை.

பொது வாழ்வில் அத்வானியின் பல தசாப்த கால சேவையானது, அரசியல் நெறிமுறைகளில் ஒரு முன்மாதிரியான தரத்தை அமைத்து, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் குறிக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு அவர் இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்.” ‘ என்று மோடி பதிவிட்டுள்ளார்.

அடிசினல ரிப்போர்ட்:

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கராச்சியில் பிறந்தவர். அரசியல் வாழ்க்கையை 1941ம் ஆண்டில் தனது 14 வயதில் சிறுவனாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கில் ஒரு தொண்டராக தொடங்கினார். பின்னர் 1951 ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்ட பாரத ஜனா சங்கத்தின் உறுப்பினராக ஆனார். 1957 ம் ஆண்டு அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டார். அவர் விரைவில் பொதுச் செயலாளராகவும், ஜன சங் தில்லி பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார். அவர் 1970 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976 ல் இருந்து 1982 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1982 ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.1990-ம் ஆண்டு அத்வானி குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை சென்றார். பீகார் மாநிலத்திற்கு யாத்திரை சென்ற போது அப்போதைய மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்தும்படி சமஸ்திபூர் மாவட்ட கலெக்டருக்கு பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டார். அப்போது அந்த மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ஆர்.கே.சிங், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுடன் அவரை கைதும் செய்தார். அத்வானி கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அயோத்தியில் ராமர் கோவில் அமைவதற்கு இந்த ரதயாத்திரை மிக முக்கிய பங்கு வகித்தது என்றே கூறலாம்.

1998 முதல் 2004 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் அவர் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில், அத்வானிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!