காக்கா குளியலா குளிக்கறீங்க? அப்ப இதை கண்டிப்பா படிச்சிட்டுங்க!

நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகிறோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கிறோம். சிலர் அதற்கும் நேரமில்லாமல் குளியலறைக்குச் சென்று சிறிது சிறிது தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு, சிறிது தண்ணீரைத் தலையிலும் தெளித்துக்கொண்டு வருவோம். அப்போது கேட்பார்கள், “என்ன இன்று காக்காய்க் குளியலா?” என்று. ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று யோசித்தால், காக்காய் திடீரென்று குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீர்நிலைகள் அருகிலே வரும். எப்போதுமே காக்காய்க்கு சந்தேகம் அதிகம். அதனால் யாராவது வந்துவிடப் போகிறார்களே, யாராலாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தலையை ஒரு முக்கு தண்ணீரில் முக்கிவிட்டு, பலமுறை தலையை சிலுப்பிக்கொள்ளும். அதுபோல அரைகுறைக் குளியல் போட்டுவிட்டு வரும் நம்மை அப்படித்தான் கேட்பார்கள்.
என்னடா ஒரு சாதாரணக் குளியலுக்கு இவ்வளவு வியாக்யானங்களா என்று யோசிப்போருக்கு இன்னும் ஏன் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே. இப்போது சொல்கிறேன்.நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார் கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.
குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது. குளியல் என்றால் குளிர்வித்தல் என்று பொருள்படும், குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மேலும் மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம். இனி குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போமா?.
முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.
அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.
அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும். நீந்தத் தெரிந்தவர்களாயிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.
சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.
எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள்
ஒருபோதுமே வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை அப்படியே தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை என்ற ஒழுங்கில் ஊற்றவேண்டும். சரி எதற்காக இப்படியெல்லாம் என்ற கேள்வி எழுகின்றதா? காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம். குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
குளத்தில் இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா? உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்களல்லவா? இது எதற்கு? உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும். எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. பாருங்கள் நமது முன்னோரின் அறிவியலை!!
நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். புத்தி பேதலிப்பு கூட சரியாகும். குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேற… இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷம்புவையும் போட்டு குளிச்சிட்டு வந்தால் நாங்கள் நோயாளியாக இல்லாமல் வேறு எப்படித்தான் இருப்போம்? சொல்லுங்கள் பார்க்கலாம்??