நாடா புயல் வந்தது.. போனது – இப்போ நெக்ஸ்ட் புயல் ரெடியாகுது! – லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியதன் முன்னோட்டமாக தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி, அது வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து வேதாரண்யம் -புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மக்கள் உஷாராக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், புயல் திடீரென வலுவிழந்தது. நேற்று காலை 5 மணி அளவில் நாகப்பட்டினம் அருகே அமைதியாக கரையை கடந்தது. பலத்த காற்று ஏதும் வீசவில்லை. 20 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் கடலோரப் பகுதிகளில் சேதாரம் ஏற்படவில்லை.

கரை கடந்த புயல் தமிழகத்தின் தரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 110 மிமீ மழை பெய்துள்ளது. சோழவரம், செங்குன்றம் 60 மிமீ, சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, முத்துப்பேட்டை 50மிமீ, திருக்காட்டுப்பள்ளி, சென்னை அண்ணாபல்கலைக் கழகம், செய்யார், சென்னை டிஜிபி அலுவலகம், வேடசந்தூர், திருப்புவனம், திண்டுக்கல், உத்தரமேரூர், செங்கல்பட்டு, வட சென்னை, மதுராந்தகம் 40மிமீ, கெ்ாடவாசல், ராமேஸ்வரம், புழல், தாமரைப்பாக்கம், நத்தம் 30மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. சாலையில் வெள்ளம் தேங்கியது. மாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் மேல் பகுதியில் பரவியுள்ளதால் இன்றும் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இதனிடையே, தற்போது அந்தமான் அருகே வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது. காற்றின் போக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் அந்த காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 5ம் தேதிக்குள் மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் தமிழகத்தை நோக்கி வரும் வாய்ப்புள்ளதால் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


