அயலி -வெப் சீரீஸ் = விமர்சனம்!

அயலி -வெப் சீரீஸ் = விமர்சனம்!

ம் நாட்டில் வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது. பின்னர் சமூக சீர்திருத்தவாதிகள் பல்வேறு சீர்திருத்த பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி. இதனிடையே வெள்ளித் திரை மற்றும் சின்னதிரை பிரியர்களை ஒருங்கே கவரும் நோக்கில் ராவான கதைக்களம், சென்சார்களற்ற காட்சிகள், பரபரப்பான திரைக்கதை என ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் வெப் சீரிஸ்களின் வருகை அதிகரித்துக் கொண்டே போகிறது..ஆனாலும் பெரும்பாலான வெப்சீரீஸ் ரத்தக் களறியைக் களமாக்கியபடியே உருவாக்கப்படுவதும் தொட்சர்கிறது. இச்சூழலில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெண் கல்வி நிலைமையை அடிப்படையாகக் கொண்டு ‘அயலி’ என்ற பெயரில் ஒரு பக்கா கமர்சியல் சினிமா பாணியில் சமூக நடப்பை அப்பட்டமாகக் கோர்த்து ஒரு வெப்சீரீஸை வழங்கி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்கள்.

அதாவது பெண் குழந்தை பருவமெய்திய சில மாதங்களிலேயே அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும், என்ற கட்டுப்பாடு கொண்ட கிராமம் வீரபண்ணை. இந்த கட்டுப்பாட்டினால் அந்த கிராமத்தில் எந்த ஒரு பெண்ணும் 9ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத சூழலில், 8ம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீ, நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது ஆசை நிறைவேறாது என்று சக தோழிகள் சொல்ல, தனது கிராமத்து பழக்க வழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை நைசாக சமளித்து தனது இலக்கை நோக்கி முன்னேறுவதில் அபிநயஸ்ரீ முனைப்பு காட்டுகிறார். அபிநயஸ்ரீ நினைத்தது போல் படித்தாரா? இல்லையா? அவரது செயல்பாடுகளினால் அந்த கிராமத்தில் மாற்றம் ஏற்பட்டதா? இல்லையா? என்பதை கலாச்சாரம், பழைய காலத்து பழக்க வழக்கங்கள் போன்ற கட்டமைப்புகளால் முடக்கி வைக்கப்பட்ட பெண்களுக்கு மட்டும் இன்றி பிற்போக்கு சிந்தனையோடு இருக்கும் அனைவருக்கும் முற்போக்கு சிந்தனைகளை புகட்டும் விதமாக சொல்லியிருப்பதே இந்த ‘அயலி’.

தமிழ்செல்வி ரோலில் பருவப் பெண்ணாக நடித்திருக்கும் அபிநயஸ்ரீ, தனது லட்சியத்தை நோக்கி பயணிப்பதும், இடையில் வரும் தடைகளை தனது குழந்தைத்தனத்தோடு தகர்த்தெறிந்து தொடர் வெற்றி பெறுவது, என்று அந்த கேரக்டராகவே நம் மனதில் வந்து அமர்ந்து விடுகிறார். அப்பாவைப் அன்பால் வீழ்த்துவது, அம்மாவிடம் பாசத்தோடு சண்டையிட்டு காரியம் சாதிப்பது, ஊரின் தெய்வமான ‘அயலி’யிடம் பிகு பண்ணி பேசுவது எனப் படு ஸ்மார்ட்டாக உலா வருபவர் சட்டையில் இருக்கும் சிவப்பு வண்ணத்தை பார்த்து அதிர்ச்சியடைபவர்களுக்கு “இங்கு” என்று கேஷூவலாக சொல்லி விட்டு கடந்து போவதும், “இங்குனு சொன்னா நம்புறானுங்க, முட்டாளுங்க” என்று அசால்டாக வசனம் பேசும் இடங்களில் கைதட்டலும் வாங்கி விடுகிறார். அம்மாவாக மலையாளம் கலந்த தமிழில் வசீகரிக்கும் அனுமோள். முதலில் ஊர்க்கட்டுப்பாடு, கணவர் போன்றவற்றுக்குப் பயந்து, பின்னர் யதார்த்தம் உணர்ந்து மகளுக்கு ஆதரவாக நிற்கும் இடத்தில் சபாஷ் சொல்ல வைத்து விடுகிறார். அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, லவ்லின், காயத்ரி, தாரா அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை புரிந்து வழங்கி இருக்கிறார்கள்.

கதை நடக்கும் கிராமத்தையும், மக்களையும் மிக இயல்பாக படமாகியிருக்கும் கேமராமேன்ஒளிப்பதிவாளர் ராம்ஜி, காட்சிகளுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார். ரேவாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், கதைக்கு ஏற்ற பின்னணி இசையால் பலம் சேர்த்திருக்கிறார்.

வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்கள். பெண் கல்வியை மையப்படுத்திய ஒரு கதையை 8 பாகங்களாக மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பதோடு, அதை சுவாரஸ்யமாக நகர்த்தியும் சென்ற இவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதிலும், வசனங்கள் அனைத்தும் பகுத்தறிவு சிந்தனையோடு இருக்கிறது.கதை 1990ம் காலக்கட்டத்தில் நடக்கிறது. அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் சகஜம் என்றாலும், தற்போதைய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் பல வகைகளில் ஒடுக்கப்படுகிறார்கள், என்பதை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அடிக்கடி வரும் காமெடி சீன்களால் சொல்லிச் சுட்டிக் கொண்டிருந்த சீர்கேடுகளின் போக்கு நீர்த்து போய் விடுகிறது. அதே சமயம் பக்தி மார்க்கத்தில் போய் கொண்டிருந்த கதையை பகுத்தறிவுப் பாதையில் திருப்பி க்ளைமாக்சில் சமாளித்து அசத்தி விட்டார்கள்

மொத்தத்தில்இந்த அயலி – அன்புக்குரியவள்

ஜி5 ஓடிடி தளத்தில் இத் தொடரைக் காணலாம்

Related Posts