உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்
திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் கோவையில் மூச்சுத் திணறலால் மரணம் அடைந்துள்ளார். இவர் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் தீர்ப்பளித்தவர் ஆவார்.
உடுமலைப்பேட்டை அருகே குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கவுசல்யா வீட்டில் இந்த திருமணத்திற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ் நிலையத்திற்கு சென்ற போது, பைக்கில் வந்த கும்பல் சங்கர் மற்றும் கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா சிகிச்சைக்கு பிறகு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..
இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அதில், முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டன், ஆறாவது குற்றவாளியான செல்வகுமார், ஏழாவது குற்றவாளியான கலை தமிழ்வாணன், எட்டாவது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும் 9-வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11-வது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.




