ரூபாய்- எடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ரூபாய் நோட்டு மாலை!

ரூபாய்- எடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ரூபாய் நோட்டு மாலை!

இயக்குனர் தயாரிப்பாளர் பிரபுசாலமோன் நிறுவனத்தின் புதிய படம் ‘ரூபாய்’. ‘சாட்டை’ என்ற படம் மூலம் இன்றைய சூழ்நிலையில் நடக்கும் கல்வி முறை எவ்வளவு தவறானது என்பதையும், அதனை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் என்ன தரத்தில் உள்ளனர் என்பதையும் மிக இயல்பாக வெளிக்காட்டிய இயக்குநர் அன்பழகன் டைரக்‌ஷனில் வந்துள்ள இப்படத்தின் பெயரை பார்த்ததும் ஏதோ அரசை குறை சொல்லப்போகும் படம் என்ற நினைப்பில் உள்ளே வருபவர்களுக்கு பொதுவாக இன்றைய இளைஞர்கள் மனதில் எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்று தவறான எண்ணம் உள்ளது, அந்த எண்ணத்தை மாற்றி நேர்மையான முறையில் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது கதை அதற்காகவே இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.

விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு கதை…

குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையே தராமல் இழுத்தடிக்கும் ஒரு கேரக்டர் சின்னி ஜெயந்த். அவர் மகள் ஆனந்தி. வீட்டை காலி செய்ய வாடகை வண்டி தேடுகிறார்.தேனியில் இருந்து கோயம்பேடுக்கு பூ ஏற்றி வரும் ஹீரோவின் வண்டியை அழைக்கிறார். அங்கே ஆனந்தியை பார்த்ததும் ஆனந்தி மீது காதல் ஏற்படுகிறது. வீட்டு சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அங்கே வீட்டுக்காரர் வீடு தரமறுக்கிறார். வேறு வீடு தேடி அலைகிறார்கள். இதற்கிடையில் வங்கியில் கொள்ளை அடித்த பணத்தை போலீஸ் சோதனைக்கு பயந்து இவர்களின் வேனில் வில்லன் தூக்கிப் போடுகிறார்.

வீடு கிடைக்காத விரக்தியில் சின்னி ஜெயந்த் இருக்க… வண்டி வாடகையும் தராமல் வீட்டு சாமான்களையும் இறக்காமல் வண்டியில் சுற்றிக் கொண்டிருக்கும் சின்னிஜெயந்த் மீது கோபம் வந்து ஒரு பாலத்தின் அடியில் எல்லா சாமான்களையும் கீழே தள்ளி விடுகிறார் ஹீரோவின் நண்பர். இதில் கை கலப்பு ஏற்பட… அந்த நேரம்பார்த்து வேனுக்கு தவணை கட்டாததால் வண்டியை சேட்டு ஆள் வைத்து சீஸ் செய்கிறார். அதிர்ச்சியில் இருக்கும் இவர்களுக்கு வில்லன் அந்த வண்டியில் தூக்கிப்போட்ட பையில் இருந்து பணம் விழுகிறது…..

அந்த பணத்தை மீட்க வில்லன் இவர்களை துரத்துகிறார்… பணத்தை கொள்ளை அடித்தவர்களை போலீஸ் தேடுகிறது… பணம் போலீசிடம் சிக்கியதா… வில்லன் என்ன ஆனான்… ஹீரோவின் காதல் ஜெயித்ததா… பணம் என்ன பாடு படுத்தியது என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ரொம்ப பெரிய விஷயத்தை சாதாரணமாக அதேநேரம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்பட்டால் வாழ்க்கை என்ன ஆகும்… நிம்மதி இருக்குமா… சந்தோஷம் கிடைக்குமா என்பதை ரொம்பவே நேர்த்தியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். இமான் இசையில் பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நலம்.

இப்படத்தில் நடித்த அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர், குறிப்பாக சின்னி ஜெயந்த் அனுபவம் திரையில் தெரிகிறது, கயல் ஆனந்தியும் மிக அழகாக நடித்துள்ளார், மைனா திரைப்படம் எப்படி அமலா பாலிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததோ அதே போல் இப்படம் ஆனந்திக்கு நல்ல பெயரை தரும். ஆனால் இறுதி கட்ட காட்சிகள் ரொம்ப செய்ற்கைத்தனமாக உள்ளது. என் கவுண்ட்ரில் இத்தனை புல்லட்டுகளி வேஸ்ட் செய்யும் போலீஸ் உலகத்திலேயே கிடையாது என்பதை மறந்து விட்டார் இயக்குநர்.

ஆனாலும் எடுத்துக் கொண்ட விஷயம் நல்ல சமாச்சாரம் இப்போதைய சமுதாயத்திற்கு தேவையான கதை. அதாவது பண ஆசைதான் எல்லா தீமைக்கு வேராக இருக்கிறது என்பதை சொன்ன இந்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ரூபாய் நோட்டு மாலை போடலாம்..!