தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் நடைமுறைக்கு வந்தும் 32 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியில்லை!

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் நடைமுறைக்கு வந்தும்  32 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியில்லை!

திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதை தவிர்க்கும் விதமாக, கிராமங்கள் முழுவதும் கழிவறைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, வரும் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து கிராமங்களிலும், கழிவறைகள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ண யித்துள்ளது. இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 25 சதவீத கிராமங்களில், இன்னும் முழுமையாக கழிவறைகள் கட்டப்படாதது சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய கணக்கெ டுப்பில் தெரியவந்துள்ளது. அதிலும் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் நடைமுறைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன பிறகு 5 மாநிலங்களே திறந்தவெளி கழிப்பறையிலிருந்து முற்றிலும் மீண்டுள்ளன. தலைநகர் டெல்லியே இந்தப் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம், இமாச்சலம், கேரளா, உத்தராகண்ட் மற்றும் ஹரியாணா மாநிலங்கள் மட்டுமே திறந்தவெளி கழிப்பறை பிரச்சினையை அகற்றியுள்ளது. ஆனால் திட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுமார் 55 கோடி மக்கள் கழிப்பறை வசதியின்றி இருந்த நிலைமை தற்போது 32 கோடியாகக் குறைந்துள்ளது. சுகாதாரம் முறையாக இல்லாததால் ஆரோக்கியக் குறைபாடுகளும் இதனால் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதோடு இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுப்போக்கினால் சுமார் 1,00,000 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். அதாவது உருவகமாகக் கூற வேண்டுமெனில் நாளொன்றுக்கு 2 ஜம்போ ஜெட் விமானங்கள் விழுந்து நொறுங்கினால் ஏற்படும் உயிரிழப்பாகும் இது. இதனால் குழந்தைகளின் உடல் ரீதியான மற்றும் அறிதிறன்களில் பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் உற்பத்தித் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. மொத்தமாக சுத்தமின்மை, சுகாதாரமின்மையினால் இந்தியாவுக்கு அதன் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படுகிறது என்கிறார் குடிநீர் மற்றும் சுகாதார மத்திய அமைச்சகச் செயலர் பரவேஸ்வரன் ஐயர்.

ஆனால் குடிநீர் மற்றும் சுகாதாரம் மாநிலங்கள் கையில்தான் உள்ளது. மத்திய அரசு தொழில்நுட்ப, திறன் மற்றும் கொள்கை ஆதரவுகளை மட்டுமே அளிக்க முடியும் என்கிறார் ஐயர். ஆனால் ஸ்வச் பாரத் திட்டத்தில் சில அடிப்படை பிரச்சினைகள் இருக்கின்றன இது பேசப்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள். இதில் டாய்லெட் பற்றிய முரண்படு தரவுகள் முக்கியமாகிறது. மேலும் இன்னமும் மனிதர்களே கழிவுகளை அகற்றும் போக்குகளும் நாடு முழுதும் உள்ளதும் இந்த விவாதத்தில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.