ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாச்சார விழாவில் ஜனாதிபதி, பிரதமர் கலந்துக்க மாட்டாய்ங்க!
டெல்லியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் உலக கலாச்சார விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ, அர்ஜென்டினா, கொலம்பியா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சுகாதாரம் மற்றும் துப்புரவு போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ராமநாதபுரத்திற்கு 20 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வந்துள்ளனர். இவர்கள் ராமநாதபுரம் நகர் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மண்குண்டு ஊருணியில் நேற்று காலை துப்புரவு பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். இந்த மரக்கன்றுகளின் அருகில் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்வதாக இருந்தது.

மேலும் பொது மக்கள் சுமார் 35 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந் தனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக யமுனா நிதியின் குறுக்கே இரண்டு மிதக்கும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலங்களை அமைக்கும் பணியில் சுமார் 120 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகமான மக்கள் மிதக்கும் பாலத்தை பயன்படுத்தினால் விபத்து ஏற்பட லாம் என்று ராணுவம் எச்சரித்த போதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோள் படி மிதக்கும் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பாலம் அமைக்கும் பணிக்காக இந்திய ராணுவ வீரர்களுக்கு வாழும் கலை அமைப்பு கட்டணம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு லிவ் யமுனா என்னும் யமுனா நதி பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக 1000 ஏக்கருக்கு மேலான நிலத்தில் மேடைகள், சிறிய அறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் மிதக்கும் பாலம் போன்றவை தயார் செய்யப்பட்டு வருகின்றன. நதி நீரை தூய்மை செய்வதற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதியின் சூழியலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் சுற்றுச்சூழல் பிரச்சனை எழுந்துள்ளதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால் சர்ச்சை ஏற்படும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் விலகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


