சுரேஷ் சங்கையாவின் கடைசி முத்திரை:”கெணத்த காணோம்!”

சுரேஷ் சங்கையாவின் கடைசி முத்திரை:”கெணத்த காணோம்!”

மிழ் சினிமாவில் யதார்த்தமான வாழ்வியலைத் திரையில் செதுக்கிய இயக்குநர்களில் முக்கியமானவர் சுரேஷ் சங்கையா. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் கவனம் ஈர்த்த அவர், தற்போது ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க, நடிகர் யோகி பாபு நடிப்பில் “கெணத்த காணோம்” என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு, ஒரு பக்கம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், மறுபக்கம் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா மீதான நெகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியது.

அரசியலாகும் காமெடி வசனம்

இயக்குநர் வசந்த பாலன் பேசும்போது ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். “கிணற்றைக் காணோம் என்பது வெறும் வடிவேலுவின் காமெடி வசனம் மட்டுமல்ல; அது இன்று ஆறுகளைக் காணோம், ஏரிகளைக் காணோம் எனப் பேசும் மிகப்பெரிய அரசியலாக மாறிவிட்டது” என்றார். தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தைத் தேடித் தமிழ்நாடு முழுக்க படக்குழு அலைந்தும், அப்படி ஒரு கிராமத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் தமிழகத்தின் இன்றைய பெருமை என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

காணாமல் போன இயக்குநர்.. நிலைத்து நிற்கும் படைப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவால் காலமானார். அவர் நம்மிடம் இல்லை என்றாலும், அவர் உருவாக்கிய இந்தத் திரைப்படம் அவர் பெயரைச் சொல்லும் எனப் படக்குழுவினர் கண்கலங்கப் பேசினர். குறிப்பாக, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, இயக்குநருடன் கோவிலில் கழித்த கடைசித் தருணங்களை நினைவுகூர்ந்து மேடையை நெகிழச் செய்தார்.

யோகி பாபுவின் நெகிழ்ச்சியான உதவி

நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பேசும்போது, “சுரேஷ் சங்கையா ஒரு அற்புதமான இயக்குநர். படத்தின் ஷாட்டுகளுக்கு இடையே பத்து நிமிடங்களில் கதை சொல்லும் ஆற்றல் கொண்டவர். அவர் இன்று இல்லை என்பது பெரிய இழப்பு” என்றார்.

பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மறைந்த இயக்குநரின் குழந்தையின் படிப்புச் செலவுக்காக, மேடையிலேயே காசோலை வழங்கித் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தினார் யோகி பாபு. ‘மண்டேலா’ படத்தைப் போலவே இந்தப் படமும் யோகி பாபுவுக்கு ஒரு அழுத்தமான அரசியல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஆர். ராமர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுரேஷ் சங்கையாவின் நேர்மையான உழைப்பிற்கும், யோகி பாபுவின் யதார்த்தமான நடிப்பிற்கும் சான்றாக உருவாகியுள்ள இந்த “கெணத்த காணோம்” திரைப்படம் வரும் வெள்ளி (மார்ச் 6) திரைக்கு வரவுள்ளது.

Related Posts