மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 114 பேர் சுட்டுக்கொலை!
![மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 114 பேர் சுட்டுக்கொலை!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/03/myanmaor-mar-28a.jpg)
உள்ளங்கையில் சுருங்கிப் போய் விட்ட இந்த நவீனக் காலத்தில் கூட அரங்கேறி ஒருக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேரை, ஒரே நாளில் மியான்மர் ராணுவ ஆட்சி சுட்டுக்கொலை செய்திருப்பதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணுவ ஆட்சி அதிகாரத்தை பறித்தது முதல், மக்கள் வீதிகளில் இறங்கி கடுமையாக போராடி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை, ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அதேநேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள், பெண்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
மியான்மரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுகொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாங்கோனின் இன்சீன் மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் 21 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மியான்மரின் ஆயுதப்படை தினத்தை கொண்டாடவிருப்பதால், அதற்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலை அல்லது பின்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும் என்றும் கூறிய ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே, அவரின் கூற்றுக்கு முரண்பாடாக இந்த மிருகத்தனமான தாக்குதல் நடந்து உள்ளது.