10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

ம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.100 க்கு மேல் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றமே காரணம் என மோடி அரசாங்கம் கூறியது.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 25% வரை குறைந்துள்ளது. ஆனால் மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு ரூபாயை கூட குறைக்கவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசாங்கத்தின் ‘எரிபொருள் கொள்ளை’ என விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் “ மோடி பதவியேற்ற 2014 ஆம் ஆண்டு மே 16 ந்தேதி டெல்லியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 107.09 அமெரிக்க டாலர். அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 71.51 ஆக மட்டுமே இருந்தது. டீசல் விலை ரூ. 57.28 க்கு மட்டுமே விற்கப்பட்டது. 2022 டிசம்பர் 1 ந்தேதி அன்று ஒரு பேரலுக்குக் கச்சா எண்ணெய் 87.55 அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.96.72க்கும் டீசல் விலை ரூ.89.62 க்கும் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை கடந்த 10 மாதங்களில் குறைந்துள்ளது. ஆனால் பா.ஜ.க-வின் கொள்ளை அதிகமாகவே உள்ளது. தனது எரிபொருள் கொள்ளையை பா.ஜ.க நிறுத்த வேண்டும்” என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!