நடிகை குஷ்பூ தி மு க-விலிருந்து திடீர் விலகல்!
”என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுகிறேன்”- என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர் வரை அனைவரும் அறிவார்கள்.
ஆனால் என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


