தமிழக பேரவை ஜூன் 2-ஆவது வாரத்தில் கூடுகிறது!
மக்களவைத் தேர்தல் நடைபெற்றதை ஒட்டி, ஒவ்வொரு துறைக்கும் தனியாக நிதியை ஒதுக்குவதற்கான துணை மானியக் கோரிக்கைகளை பேரவையில் நிறைவேற்ற முடியவில்லை.இந்த நிலையில், துணை மானியக் கோரிக்கைகளுக்கு பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக சட்டப் பேரவைக் கூட்டம் ஜூன் 2-ஆவது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகக் கூடும் என்று சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத் தொடர் ஒரு மாத காலம் நடைபெறலாம் என்றும், அது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும் எனவும் அவர்கள் கூறினர்.மேலும் சட்டசபை குழுக்களுக்கு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை அலுவலர் ஆய்வுக் குழுத் தலைவராக இருந்த, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, தேர்தல் முடிவுக்கு பின், அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரது இடத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். இவர், தற்போது, சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமாவை தொடர்ந்து, காலியாக இருந்த, பொது கணக்கு குழுத் தலைவர் பதவியில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு உறுதிமொழி குழுத் தலைவராக, மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இப்பதவியில், அமைச்சர் உதயகுமார் இருந்தார்.இதற்கிடையில் இந்தக் கூட்டத் தொடருக்கும் முன்பாகவே தே மு தி க எம் எல் ஏ-க்களில் நான்கு பேர் அதிமுக பக்கம் சாயப் போவதாக தகவல் வெளியாகிறது


