செய்தியைக் கேட்க / Listen to News
இந்தியாவில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளில், மேல்நிலைக் கல்வியை முழுமையாக முடிப்பதற்கு முன்பே சுமார் 73 சதவீத மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடும் அதிர்ச்சி கரமான நிலவரத்தை நாடாளுமன்றக் குழு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு (2026-27) மக்களவையில் தாக்கல் செய்துள்ள தனது பத்தாவது அறிக்கையில், நாட்டின் கல்வித் துறை சந்தித்து வரும் கட்டமைப்பு ரீதியான கடுமையான சவால்களையும், மாணவர்களை ஆட்கொண்டுள்ள மன அழுத்தத்தையும் விரிவாகப் பட்டியலிட்டுள்ளது.
நாட்டின் பாடசாலை அமைப்பில் மேல்நிலைக் கல்விக்கான பள்ளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதே இந்த இடைநிற்றலுக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுடிஐஎஸ்இ (UDISE) தரவுகளின்படி, நாட்டில் உள்ள 10.92 லட்சத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9.11 லட்சத்திற்கும் அதிகமானவை தொடக்கப் பள்ளிகளாகவே உள்ளன. ஆனால், மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 90,866 ஆக மட்டுமே சுருங்கிவிடுகிறது. தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவர்களுக்குத் தங்கள் பகுதியிலேயே மேல்நிலைப் பள்ளிகள் கிடைக்காத புவியியல் ரீதியான தடையே பெரும்பாலான மாணவர்களைப் படிப்பை நிறுத்தக் கட்டாயப்படுத்துகிறது.

மாணவர் சேர்க்கை புள்ளிவிவரங்களும் இந்த அவல நிலையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. தொடக்கப் பள்ளிகளில் 6.18 கோடியாக இருக்கும் மாணவர் சேர்க்கை, 6 முதல் 8 வகுப்புகளில் 4.08 கோடியாகக் குறைகிறது. இது உயர்நிலைக் கல்வியில் 2.36 கோடியாகவும், மேல்நிலைக் கல்வியை அடையும் போது வெறும் 1.64 கோடியாகவும் மிகக் கொடூரமாகச் சரிவடைகிறது. இத்தகைய வியத்தகு சரிவைத் தடுக்க, இருக்கும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை உடனடியாக முழுமையான மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகளின் பற்றாக்குறை ஒருபுறமிருக்க, வகுப்பறைகளில் நிலவும் பாடநூல் தட்டச்சு மற்றும் தேர்வுமுறை மாற்றங்கள் மாணவர்களுக்குப் பெருமளவில் கல்விச் சுமையை ஏற்படுத்தி வருகின்றன. தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் தேசியக் கலைத்திட்ட விதிகள் (NCF 2023) ஆகியவற்றிற்கு ஏற்ப சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட போதிலும், அதற்கேற்ற புதிய என்சிஇஆர்டி (NCERT) பாடநூல்கள் இன்னும் முழுமையாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படவில்லை. பழைய பாடப் புத்தகங்களை வைத்துக்கொண்டு, புதிய செயல்முறை சார்ந்த பயன்பாட்டுத் தேர்வுகளை (Application-based Board Exams) எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்குக் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் (ரூ. 1,600) பெரும் பாரமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள இக்குழு, எஸ்சி, எஸ்டி மற்றும் ஏழை மாணவர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இல்லை என்பதையும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதையும் சுட்டிக்காட்டி நாடாளுமன்றக் குழு தனது கவலையைப் பதிவு செய்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் கல்வியே அடிப்படை எனும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, பாடநூல்களை உடனடியாக விநியோகிப்பதும், மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதும் மத்திய, மாநில அரசுகளின் உடனடி அவசியக் கடமையாகும்.
தமிழ் செல்வி

