உலகளவில் 3ல் ஒரு பங்கு ஏழைகள் இந்தியர்கள் : மத்திய அரசு தகவல்
கடந்த 2013-14ம் நிதியாண்டில் மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் புழங்கியிருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இது 2012-13ம் நிதியாண்டை விட இரு மடங்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியான அதே நேரம் உலகில் உள்ள ஏழைகளில் 3ல் ஒரு பங்கினர் இந்தியாவில் வசிக்கின்றனர். உலகில் 5 வயதிற்குள் மரணமடைபவர்கள் அதிகம் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்று சமீபத்திய ஐ.நா. மில்லெனியம் மேம்பாட்டு இலக்குகள் அறிக்கை தெரிவித்துள்ளது. சிறுபான்மை விவகார துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா இந்த அறிக்கையை வெளியிட்டு கூறுகையில், இதில் கூறப்பட்டு உள்ளவை நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு சவால் விடுத்துள்ளது. அவை திறமையுடன் சரி செய்யப்படும். நல்ல நாட்கள் நிச்சயம் வரும் என தெரிவித்துள்ளார்.

நாம் செய்த விசயங்களுக்காக பெருமைப்பட எதுவும் இல்லை. வறுமை மிக பெரிய சவால். அடுத்த அறிக்கை வரும்பொழுது, நாம் சிறப்பாக செய்து முடித்து இருப்போம் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன். இதனை பிரதமர் மோடியின் வறுமை ஒழிப்பு மற்றும் அனைவராலும், அனைவருக்குமான முன்னேற்றம் என்ற ஈடுபாட்டின் அடிப்படையில் வலியுறுத்தி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் திட்டத்துடன் மிக நீண்ட கால அளவிலான தொடர்பை கொண்டிருக்கும் ஹெப்துல்லா, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அது குறித்த விசயங்களில் கவனம் செலுத்தி வந்தார். அறிக்கையின்படி, திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். அதனுடன், 17 சதவீத தாய்மார்கள் மரணமடைவதாகவும் அது தெரிவிக்கின்றது.
வறுமையை ஒழிப்பதில் மிக விரைவான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. எனினும், இந்தியாவை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 13 சதவீத ஏழைகள் கொண்ட நாடாக அது இருந்துள்ளது. அதனை தொடர்ந்து நைஜீரியா 9 சதவீதத்தினருடனும் மற்றும் வங்காளதேசம் 5 சதவீதத்தினருடனும் ஏழைகளை கொண்டுள்ளது என்று அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், மற்ற நாடுகளை விட பெரும்பாலான விசயங்களில் மோசமான நிலையிலேயே உள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.


