இன்று முதல் காஷ்மீர் முதல்வர் – மெஹபூபா முஃப்தி
ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த முஃப்தி முகமது சயீது உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, அங்கு ஜனவரி மாதம் 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை தில்லியில் மெஹபூபா முஃப்தி கடந்த மாதம் சந்தித்துப் பேசியதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் என்.என். வோராவை மெஹபூபா முஃப்தி சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். அவருக்கு ஆதரவு அளிப்பதற்கான பாஜகவின் கடிதத்தை ஆளுநருக்கு அக்கட்சி கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தது. இதைப் பரிசீலித்த ஆளுநர் என்.என். வோரா, மெஹபூபா முஃப்தியை பதவியேற்க வரும்படி சனிக்கிழமை அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பையேற்று, ஜம்முவில் ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஹபூபா முஃப்தி அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். அவருடன் பிடிபி, பாஜகவைச் சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான நிர்மல் சிங் மீண்டும் துணை முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார். முஃப்தி முகமது சயீதின் அமைச்சரவையில் பாஜக சார்பில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் மீண்டும் மெஹபூபா முஃப்தியின் அமைச்சரவையில் இடமளிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. அதேசமயம், பிடிபி தரப்பில் யார்-யார் அமைச்சர்களாகப் போகின்றனர் என்பது இன்று மதியம் தெரிய வரும்


