அய்யே.. நான் அடுத்தாப்லே 110ம் விதியிலே இன்னா சொல்ல போறேன்னு ஒட்டு மொத்த ஜனங்களும் வெயிட்டிங்! – ஜெ. அறிக்கை
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்”கருணாநிதிக்கும், தி.மு.க. வினருக்கும் 16-5-2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் தாங்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறப்போவதில்லை என்பது தெரிந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். எனவே தான் பலவித பொய்ப்பிரசாரங்களை தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 90 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை என ஒரு பொய்ப்பிரசாரத்தை தி.மு.க.வினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறு திகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது பற்றி நான் பொதுக்கூட்டங்களில் விரிவாக எடுத்துக்கூறிவருகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல அறிக்கைகளை நான் அளித்துள்ளேன். அவற்றில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது பற்றியெல்லாம் நான் எடுத்துக் கூறியுள்ளேன்.
இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள காரணத்தால் தான், ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் போதும், 110 விதியின் கீழ் நான் மக்கள் நலன் பயக்கும் விதமாக என்னென்ன புதிய அறிவிப்புகளை வெளியிடப்போகிறேன் என ஒட்டு மொத்த தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவர்.
நான் சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களில் சில திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக் கூடியவை. கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் கட்டுவது போன்ற அறிவிப்புகள் ஒன்றிரண்டு வருடங்களில் நிறைவேற்றப்படக் கூடியவை. சில்ல ஹல்லா புனல் மின் திட்டம் போன்ற பெரும் திட்டங்கள் சில ஆண்டுகளில் முடிக்கக் கூடியவை.
110 விதிகளின் கீழ் நான் அறிவித்தவை அனைத்தும் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே இந்த அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு பொய்ப்பிரசாரத்தை தி.மு.க.வினர் மேற்கொண்டனர். அப்போதைய எனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஒரு சில உதாரணங்களை சுட்டிக்காட்டி இதற்கு நான் பதில் அளித்துள்ளேன். பொய்ப்பிரசாரம் செய்த தி.மு.க.வினருக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான சம்மட்டி அடியை கொடுத்தனர். எனினும், சட்டப்பேரவையிலும் தி.மு.க.வினர் இதே குற்றச்சாட்டை எழுப்பினர். அதற்கு சட்டப்பேரவையில் விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பொய்ப்பிரசாரம் ஒன்றையே தங்களது பிரசார ஆயுதமாக நம்பியுள்ள தி.மு.க.வினர் தற்போதும், 110 விதியின் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என திரும்ப திரும்ப பொய் பேசி வருகின்றனர். எனவே, ஆண்டுதோறும், துறை தோறும் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றி துறை வாரியான விளக்கங்களை நான் தொடர்ந்து அளிக்க விரும்புகிறேன். இன்று எனது அறிக்கையில் 3 துறைகள் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளேன்” என்று கூறி இப்போது மூன்று துறைகளில் செயது முடித்தவைகளைப் பட்டியலிட்டுள்ளார் ஜெயலலிதா.


