செய்தியைக் கேட்க / Listen to News
அந்தோனிஸ் அட்லியர் (Anthony’s Atelier) நிறுவனம் சார்பில் டி. ஆண்டனி தயாரித்து, எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பெங்கால் நடிகை மதுமிதா தாஸ் நடித்திருக்கிறார். ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
கதைக்களம்: தனிமையும் காதலும்
தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான். அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாகும். ஒரு பெண் எஸ்கார்ட்டுக்கும், மதுவுக்கு அடிமையான ஒருவருக்கும் இடையிலான வித்தியாசமான காதல் கதையை, பழைய காதல் கதைகளின் உணர்வைத் தக்கவைத்து நவீன திரைக்கதையுடன் உருவாக்கியுள்ளனர்.

விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் லைவ் சவுண்ட் சிறப்பம்சம்
டி. ஆண்டனியே படத்தொகுப்பும் செய்துள்ள இப்படத்திற்கு பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிங்க் சவுண்டில், அதாவது டப்பிங் இல்லாமல் நேரடியாக லைவ் சவுண்ட் முறையில் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். 18 நாட்களில் வலுவான முன்தயாரிப்புடன் படப்பிடிப்பை முடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைக்க, ஜோயி ரிடா பின்னணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.
திரையுலக பிரபலங்களின் வாழ்த்து
நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் பேசுகையில், “குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது. டப்பிங் இல்லாமல் லைவ் சவுண்டில் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது” என்றார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் ஓடிடி பிரச்சனைகள் குறித்து அரசுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், படம் செப்டம்பர் 4-ல் வெளியாகி வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் ஆண்டனி மற்றும் கதாநாயகி மதுமிதா தாஸ் ஆகியோர் தங்களது முதற்கட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள இக்காதல் திரைப்படத்திற்கு ஊடகங்களும் ரசிகர்களும் உரிய ஆதரவை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
