பாஜக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு!- யாரிவர்? முழு விபரம்!

பாஜக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு!- யாரிவர்? முழு விபரம்!

நாட்டின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் ஜனாதிபதி குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும் அவர் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என்றும், அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்றும் இன்று பாஜக நாடாளுமன்ற குழுவிலே பேசி விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது இவை அனைத்திற்கும் பொருத்தமான திரௌபதி முர்முவை வேட்பாளராக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரௌபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா இன்று அறிவிக்கப்பட்டார். இப்போது பாஜகவும் தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளது.

அது சரி இந்த திரௌபதி முர்மு யார்?

ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பெண்ணான இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒடிசாவிலிருந்து ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடியின தலைவரும் இவரே.

ஜூன் 20, 1958-ல் பிறந்த திரௌபதி முர்மு, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் ஒடிசா அரசியலில் நுழைந்தவர். தனது சொந்த மாவட்டமான மயூர்பஞ்சில் உள்ள ராய்ராங்பூ தொகுதியில் பாஜக சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராய்ராங்பூரின் கவுன்சிலராக வெற்றிபெற்று தனது தேர்தல் அரசியலில் பயணத்தை தொடங்கிய முர்மு ஒரு அரசியல்வாதியாக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2013 முதல் 2015 வரை பாஜகவின் எஸ்டி மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். என்றாலும், கவுன்சிலர் ஆன 1997ம் ஆண்டு அவருக்கு பாஜகவின் எஸ்டி மோர்ச்சா மாநில துணைத் தலைவர் என்ற பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின்போது ஒடிசாவின் போக்குவரத்து, வர்த்தகம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறையின் அமைச்சராக பதவி வகித்தவர் 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தான் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார்.

error: Content is protected !!