கோவாக்சின்® தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!
கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பட்டியலை உலக சுகாதார மையம் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் (emergency use listing, EUL) WHO சேர்த்து கொண்டது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்வது அவசியமாகியிருக்கிறது. இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்கு பயணம் செய்யும்பட்சத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்தன.
இச்சூழலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளில் உலக சுகாதார அமைப்பு கோவிஷீல்டுக்கு மட்டும் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கியது. ஆனால், கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைபெறவில்லை என்று சொல்லி அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இரண்டு தடுப்பூசிகளுமே இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் உலக நாடுகளுக்கு பயணிக்கமுடியாது என்ற நிலை இருந்தது. இதனால் கோவாக்சினின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக பேசப்பட்டது.
இந்நிலையில், அவசரகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் இனி சிக்கல் இருக்காது.