June 7, 2023

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! – ஸ்டாலின் அரசு அறிவிப்பு

ண்மையில் நடைபெற்ற அண்ணாப் பல்கலைக் கழகத் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்றும், மதிப்பெண்கள் முறையாக வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இத்தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் 2020க்கான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக (Proctored Online Examination) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும், நன்கு படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகத் தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்கள்.

1. பிப்ரவரி 2021இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும்.

2. இம்மாணாக்கர்கள் இத்தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

3. பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம்.

4. தேர்வு 3 மணி நேரம் நிகழ்நிலைத் தேர்வாக (Online Examination) நடைபெறும். பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள்கள் முறையே கடைப்பிடிக்கப்படும். இத்தேர்வுகள், தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும்.

5. எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.

பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள்

தற்போது ஊரடங்கு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும். மாணாக்கர்கள் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தித் தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.