அப்போலோ-வில் ஜெயலலிதாவுக்கு என்னாச்சு? என்ன ட்ரீட்மெண்ட் நடக்குது?
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று நினைத்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவருக்கு திடீர் கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். ஏற்கெனவே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவைத் தொடர்புகொண்ட அப்போலோ மருத்துவர்கள், அவரது ஆலோசனையின் பேரில் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவக் குழு சென்னை வந்து இருக்கிறது.முதல்வருக்கு இதய மற்றும் மூச்சுயியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயர் மருத்துவக் குழு ஆலோசனையின் பேரில் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து ‘எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன்’ என்பதன் சுருக்கமான எக்மோட்ரீட்மெண்ட் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போதுதொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். 24 மணி நேரத்திற்கு பின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் வெளியே வரும்.

அது சரி..கார்டியாக் அட்டாக் என்றால் என்ன ? அதற்கு சிகிச்சை எப்படி? என்று கேட்பவர்களுக்கான ரிப்போர்ட்
நம்முடைய உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டுசெல்ல இதயம் துடிக்க வேண்டும். இதயம் துடிக்க அதன் உள்ளேயே ஒரு மினி ஜெனரேட்டர் உள்ளது. இது இதயத்தின் ஒவ்வோர் அறைக்கும் மின்சாரத்தைக் கொண்டுசென்று இதயத்தைத் துடிக்கச் செய்யும். இதயத்தில் போதுமான அளவில் மின்சாரம் உற்பத்தியாகாவிட்டால், இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதனால் உடல் முழுவதும் ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த நிலையில் மாரடைப்புக் கும் ‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.இதயத் துடிப்பு திடீரென முடங்குவதற்கு ‘சீரற்ற இதயத்துடிப்பு’ எனப்படும் அரித்மியா உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம்தான் மாரடைப்பு. மாரடைப்பு வரும்போது அறிகுறிகள் தெரியும்; இதயத்துடிப்பு இருக்கும்.மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினைவோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக அவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம்.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (கார்டியாக் அட்ட்டாக்), மாரடைப்பை விடவும் தீவிரமான சிக்கல். இது, ஏற்பட்டால் உடனடியாக சுயநினைவை இழந்து, மரணம் நேரிடலாம். அதாவது திடீரென ஒருவர் நம் கண் முன் நிலைகுலைந்து விழுகிறார் எனில், உடனடியாகச் சில விநாடிகளுக்குள் அவரின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்.எந்த உணர்ச்சியும் இன்றிக் காணப்பட்டால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம். அவரது கையில் நாடி பார்ப்பதோ, இதயத்துக்கு அருகில் காதைவைத்துச் சத்தம் கேட்கிறதா எனச் சோதனை செய்வதோ வேண்டாம். அவை எல்லாம் நேரத்தை வீணாக்கும் செயல்கள்.
ஒருவருக்குத் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஒவ்வொரு நிமிடமும் 10 சதவிகிதம் குறைகிறது. அதாவது, 10-வது நிமிடம் அவர் நிரந்தரமாக உயிர் இழக்கக்கூடும்.எனவே, உணர்ச்சியே இல்லை எனில், தாமதிக்காமல் உடனடியாக சி.பி.ஆர் எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும். தொடர்ந்து ‘எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன்’ என்பதன் சுருக்கம்தான் எக்மோட்ரீட்மெண்ட் செய்யலாம் .
அதாவது உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரல் பணியைச் செய்வது என்று அர்த்தம். ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். சில மணி நேரங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகும்போது, ‘எக்மோ’ கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த கருவியைப் பயன்படுத்தும்போது மூளை செயல்படும். மற்றவர்களுடன் பேசலாம். கருவி பொருத்தியிருக்கும் நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும்.
சிகிச்சை பலன் அளிக்காதபோது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.


