பாஸ்..பாஸ்…..பத்தாம் வகுப்பு அனைவரும் பரிட்சை எழுதாமலே பாஸ்.!!

பாஸ்..பாஸ்…..பத்தாம் வகுப்பு அனைவரும் பரிட்சை எழுதாமலே பாஸ்.!!

தமிழ்நாட்டில் வரும் 15ம்தேதி நடக்கவிருந்த 10–ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுகிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். 11–ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.

2019-–2020–ம் கல்வி ஆண்டுக்கான 10–ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2019–-2020–ம் கல்வி ஆண்டுக்கான 10–ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11–ம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன (வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்), வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்வி-கணக்கு பதிவியல் (பழைய பாடத்திட்டம்))

ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, ஐகோர்ட் இந்த தேர்வுகளை தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது. தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15–ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10–ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும், 11–ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும்.

12–ம் வகுப்பு

12–ம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12–ம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். “என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

10–ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9½ லட்சம் மாணவர்கள் எழுத இருந்தனர். இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். முதல்முறையாக இப்போது தான் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுச்சேரியிலும் அனைவரும் பாஸ்

புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக அரசின் முடிவைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என புதுச்சேரி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!