தக் லைஃப் படமும் டீக் உட் டீமுக்கு துணை போன கர்நாடகா ஐகோர்ட்டும்!

தக் லைஃப் படமும் டீக் உட் டீமுக்கு துணை போன கர்நாடகா ஐகோர்ட்டும்!

லக நாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்ப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் டைரக்ட் செய்துள்ள இந்த படம், நாளை மறுநாள் (5–-ந் தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு கேட்கமாட்டேன்

இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் கர்நாடகத்தில் அவரது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கு

இந்நிலையில் கமல்ஹாசன் தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அதில் தனது படத்தை வெளியிட அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது எனவும், திரையரங்குகளில் படம் தடையின்றி வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

கமலுக்கு ஐகோர்ட் கேள்வி

இந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக ஐகோர்ட், ‘கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். கமல்ஹாசன் தனது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருத்தது.மேலும், “கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக் கேளுங்கள், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்” என்று நீதிபதி தெரிவித்தார்.

விசாரணை விபரம்

தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது கமல்ஹாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தார். அப்போது இந்தக் கடிதம், கன்னட மொழி மற்றும் கர்நாடக மக்கள் மீதான உண்மையான அன்பின் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தில் கமல்ஹாசன் “புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது இந்த அறிக்கையின் நோக்கம். பொது அமைதியின்மை மற்றும் விரோததுக்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை. அதனை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. எனது வார்த்தைகள், அவற்றுக்கான நோக்கம் கொண்ட உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன்” என்று தெரவித்திருந்தார்.

இதனைக் கேட்ட கர்நாடக ஐகோர்ட் நீதிபதி, ‘கடிதத்தின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஒரு வார்த்தை மட்டும் இடம்பெறவில்லை. மன்னிப்பு இடம்பெறவில்லை’ என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த கமல் தரப்பு வழக்கறிஞர், “ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு, இந்த அளவுக்கு வந்துள்ளது. மொழி மீதான தனது அன்பை கமல்ஹாசன் உண்மையாக வெளிப்படுத்தியுள்ளார். அதனை நாம் பாராட்ட வேண்டும். தீமையாக இருந்தால்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் தீமை எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு ‘நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காமல் ஈகோவில் இருக்கிறார். மக்களின் உணர்வுகள்தான் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது’ நீதிபதி கூறினார்.

நீதிமன்றத்தின் அவதானிப்புக்கு பதில் அளித்த வழக்கறிஞர் தியான், “இது ஈகோ இல்லை. விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மொழியை அவமதிக்கும் நோக்கம் இல்லை” என்று தெரிவித்தார்.

‘அப்படியென்றால் மன்னிப்புக் கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைத்தால் என்ன? அவரின் விளக்கம் ஒரு நியாயப்படுத்தலைப் போல உள்ளது’ என்று நீதிபதி கூறினார்.

அதன்பின், “கமல்ஹாசன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெரிவித்துவிட்டார். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அவர் கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட விரும்பவில்லை” என்று வழக்கறிஞர் தியான் வாதத்தை முடித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தனது படத்தை தற்போது கர்நாடகாவில் வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்து கொண்ட கர்நாடக ஐகோர்ட், அனைத்து தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை வழக்கை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கட்டிங் கண்ணையா

error: Content is protected !!