U-19 உலகக் கோப்பை: 5வது முறை கோப்பையை வென்றது இந்திய இளம்படை!

U-19 உலகக் கோப்பை: 5வது முறை கோப்பையை வென்றது இந்திய இளம்படை!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை தொடர்ந்து வீரர்களுக்கு தலா ரூ.40லட்சம் பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

4-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மேற்கிந்திய தீவுகள் நாட்டில் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் ஆஸ்திரேலியாவுடன் அரையிறுதிப் போட்டியை எதிர்கொண்ட இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 61 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பின்தங்கியது. ஜேம்ஸ் ரிவ் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 44.5 ஓவர்களில் 189 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

ஜேம்ஸ் ரிவ் 116 பந்துகளில் 95 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா 5 விக்கெட்களையும், ரவிக்குமார் 4 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.இதை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.கேப்டன் யாஷ் துல் 17 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் இந்திய வீரர்கள் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரை சதம் கடந்து இந்திய அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்து சென்றனர். இறுதியில் 47.4 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து இந்திய அணி 5வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. ராஜ் பாவா ஆட்டத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இறுதிப்போட்டியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.40 லட்சமும், அணி உதவியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!