சரித்திரக் கதைகளில் சாதனைப் படைத்த சாண்டில்யன்!

சரித்திரக் கதைகளில் சாதனைப் படைத்த சாண்டில்யன்!

‘சாண்டியல்யன்’ வரலாற்றுப் புதினங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களால் இந்தப் பெயரை மறக்கவே முடியாது. அவர் எழுதிய 48 வரலாற்று நாவல்களில் கடல் புறா,யவன ராணி, ஜலதீபம் (மூன்று பாகங்கள்), மன்னன் மகள், கன்னி மாடம் போன்ற புதினங்களை இன்றைக்கும் கூட தேடி பிடித்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

இந்த சாண்டில்யன் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் விற்பனையில் தேக்கம் வந்தால் சாண்டில்யன் தொடரை அறிவித்து, அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்வார்கள் என்று சொல்வார்கள். அப்படி பலரால் புகழப்பட்ட சாண்டில்யன் மறைந்த நாள் இன்று.

தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூர் அவரது சொந்த ஊர். 1910ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் திருக்கோவிலூர். சாண்டில்யனின் இயற்பெயர் எஸ்.பாஷ்யம்.

கல்லூரிப் படிப்பில் ‘இன்டர்மீடியட்’ படித்தார். அப்போதே அவருக்குத் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளத்தொடங்கிய பிறகு, சென்னை வந்த அவருக்கு அறிஞர் வெ.சாமிநாதசர்மா, கல்கி போன்றோர் நண்பர்களாயினர். இருவருடனும் பழகியதால் சிறுகதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அந்நாளில், ‘திராவிடன்’ இதழாசிரியர் தோழர் சுப்பிரமணியம் நண்பரானார். அவருடைய ‘திராவிடன்’ இதழில் ‘சாந்தசீலன்’ என்ற சிறுகதையை எழுதினார். அந்தக் கதையைப் படித்த கல்கி, அவர் ஆசிரியராக இருந்த ஆனந்த விகடனில் எழுத வற்புறுத்தினார். சாமிநாதசர்மா ஆசிரியராக இருந்த ‘நவசக்தி’யிலும் சாண்டில்யனின் கட்டுரைகள் வெளிவந்தன.

சாண்டில்யன் எழுதிய ‘பலாத்காரம்’ என்ற முதல் நாவலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சிறப்பாக முன்னுரை எழுதியிருக்கிறார். பிற்காலத்தில், ‘புரட்சிப்பெண்’ என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது. சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறிந்த சுதேச மித்திரன் ஆசிரியர் ஸி.ஆர்.சீனிவாசன், அவரை நிருபர் பணியில் அமர்த்தினார். சாண்டில்யன், உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார். சாண்டில்யன் நிருபர்களுக்கு வழக்கு மன்றத்திலிருந்த மரியாதையை சுவைபட விவரித்து, ‘ஆங்கில ஏடுகளின் நிருபர்களுக்கு மட்டும் நீதிமன்றத்தில் வசதியாகவும் மற்ற தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் நின்றுகொண்டுதான் எழுதவேண்டிய நிலை’ உள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியும் எழுதியும் வந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை சுதேசமித்திரனில் வெளிவரச் செய்தார். சுதேசமித்திரன் செய்தி வழக்கறிஞர்களிடையே பரவியது. சாண்டில்யனுக்கு உட்கார நாற்காலி வசதி செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை எங்கும் பேசப்பட்டது. 1937இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதினார். சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது. பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவி தரப்பட்டது. இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி ‘ஹிந்துஸ்தான்’ வார இதழில் சேர்ந்தார்.

சாண்டில்யனுக்கு சினிமா, நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ‘ஹிந்துஸ்தானி’ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. திரைப்படக் கலையில் முன்னணியில் நிற்க வேண்டுமென்று இயற்கையாகவே அவரிடம் இருந்த லட்சியம் அப்போது நிறைவேறியது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொல்லியிருக்கிறார்.

பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.

ஆனால், இளம் வயதிலிருந்தே அவரின் லட்சியம் எழுத்தாளராக வேண்டுமென்பது. பிரபலமாக விற்பனையாகும் பத்திரிகைக்கு ஆசிரியராக வேண்டுமென்பது. முதல் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது. இரண்டாவது எண்ணம் சொந்தமாக பத்திரிகை நடத்தி, வெற்றி பெறவில்லை. பிறகு, மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். ‘ஞாயிறு மலர்’ என்ற சிறப்புப் பகுதியின் பொறுப்பாளரானார். சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையிலும் எழுதினார். ‘அமுதசுரபி’யில் சரித்திர நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்ட சிறுகதைகளை அவ்வப்போது எழுதினார். அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘அமுதசுரபி’ ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன்,

‘சிறுகதைகளாக எழுதும் நீங்கள் வரலாற்றுப் புதினங்கள் எழுதவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதால், ‘ஜீவபூமி’ என்ற சரித்திரத் தொடரை எழுதினார். ‘ஜீவபூமி’ தொடர், பின்னர் பிரபல அமெச்சூர் நாடக மன்றத்தாரால் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

‘ஜீவபூமி’ தொடருக்குப் பிறகு, ‘மலைவாசல்’ என்ற தொடரை எழுதினார். ‘மலைவாசல்’ புதினத்துக்குக் கிடைத்த வாசகர்களின் வரவேற்பால் பல வரலாற்றுப் புதினங்களை எழுத அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது. கன்னிமாடத்தில் தொடங்கி, கடல்புறா (மூன்று பாகங்கள்), யவனராணி முதலிய பிரம்மாண்டமான நாவல்களை எழுதினார். மொத்தம் 48 நூல்களை எழுதியுள்ளார்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படக் கதை வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர்கள் போன்றோரிடையே முன்னணி இடத்தைத் தேடிக்கொண்ட சரித்திரக்கதை சக்ரவர்த்தி சாண்டில்யன், ‘சீனத்துச் சிங்காரி’ என்ற தொடரை ‘குமுதம்’ வார இதழில் எழுதத் தொடங்கியபோது திடீரென நோய்வாய்ப்பட்டார். மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதினார். மருத்துவமனையில் இருந்தபோதும், மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகும் சாண்டில்யனைச் சந்தித்துப் பேசும் பழக்கம் கலைமாமணி விக்கிரமனுக்கு இருந்தது. இதையறிந்த, ‘குமுதம்’ பதிப்பாளர் விக்கிரமனிடம், ‘நீங்கள்தான் சீனத்து சிங்காரியைத் தொடர வேண்டும்’ என்று வற்புறுத்தினார்.

“சாண்டில்யன் எழுத்து எங்கே? என் எழுத்து எங்கே? அவர் எழுத்து பட்டு நூல்; என்னுடையது பருத்தி நூல். இரண்டையும் சேர்த்துப் பட்டாடை நெய்து முடிப்பது சரியாகாது” என்று மறுத்து விட்டார். முடிவடையா கோபுரமாய் ‘சீனத்துச் சிங்காரி’ நின்றுவிட்டது.  அதே போல், சாண்டில்யனுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 11ஆம் தேதி அவர் துடிப்பு அடங்கியது

error: Content is protected !!