இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை அறிவிப்பு!
![இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை அறிவிப்பு!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2020/01/srilanka-jan-3a.jpg)
இலங்கை, தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு ஒரு நாடாகும். நான்கு பக்கமும் நீர் சூழ, மலை களும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் இலங்கைத் தீவு. இதனால் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கான நுழைவு இசைவை (விசா) வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கவிருப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் பிரசன்ன ரணதுங்க வியாழக்கிழமை விளக்கிய போது, “கடந்த ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை யின் சுற்றுலாத் துறை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே அந்தத் துறையை மேம்படுத்து வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, அதற்கான விசாக்களை கட்டணமின்றி வழங்க முடிவு செய்துள்ளோம்.
வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை இத்தகைய இலவச சுற்றுலா விசாக்கள் விநியோகிக்கப் படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், சம்பந்தப்பட்டவா்களின் வேண்டுகோளை ஏற்று, இந்தத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவிருக்கிறோம் என்றாா் அவா்.
முன்னதாக இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு, இலவச சுற்றுலா விசா திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.