புதுச்சேரி அமைச்சரவை இலாகா பட்டியல் வெளியீடு.!

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7ம் தேதி பதவியேற்றார். இதனைத்தொடர்த்து முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்பதில் கால தாமதம் ஏற்பட்டது.தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக லஷ்மி நாராயணன், ஜெயக்குமார், சந்திரபிரியங்காவும், பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணகுமார் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர், இருப்பினும் அவர்களுக்கான இலாகாக்கள் இதுவரை ஒதுக்கப்படவில்லை இதனால் துறை சார்ந்த பணிகளில் ஈடுபடமுடியாமல் அமைச்சர்கள் இருந்து வந்தனர், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பாக என்.ஆர் காங்கிரஸ் பாஜக இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை, முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ள இலாகாக்கள் குறித்த பட்டியலை வழங்கினார்.
AanthaiReporter Puducherry Minister’s Portfolio
அந்தப் பட்டியலை ஏற்று துணை நிலை ஆளுநர் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டார் .
அதன்படி, முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மற்ற அமைச்சர்களுக்கான துறைகள்:
க.லட்சுமி நாராயணன் – பொதுப்பணித்துறை, சுற்றலாத்துறை, விமானப் போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அச்சகம்.
தேனி சி.ஜெயக்குமார் – வேளாண், கால்நடைத்துறை, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்.
சந்திரபிரியங்கா – ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டுவசதித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாசாரம்.
ஏ.நமச்சிவாயம் – உள்துறை, மின்சாரத்துறை, தொழில்கள் மற்றும் வர்த்தகம், கல்வித்துறை.
சாய் ஜெ.சரவணன்குமார் – நுகர்பொருள் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை, சிறுபான்மையினர் நலன், சமூக மேம்பாடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன