விநாயகர் சிலையை வைத்து அரசியல் – ஐகோர்ட் ஜட்ஜ் கருத்து & விநாயகர் சிலைகள் வைக்க என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

விநாயகர் சிலையை வைத்து அரசியல் – ஐகோர்ட் ஜட்ஜ் கருத்து & விநாயகர் சிலைகள் வைக்க என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிலைகள் வைப்பதற்கான இடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சிலை வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் அந்தந்த பகுதியில் உள்ள சட்ட ஒழுங்கு நிலைப்பாடு பொறுத்து, சிலை வைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க உள்ளூர் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசின் அரசாணைக்கு முரணாக விநாயகர் சிலைவைக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனுக்கள் ஏற்கப்படாது எனக் கூறி மனுவை முடித்து வைத்துள்ளார்.

அதேசமயத்தில், “சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி எந்த சாமிகளும் கேட்காத நிலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் என்ன பயன்? இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்னப் பயன்? விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக சென்று அரசியல் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நான் பதிவு செய்த கருத்துகள் எனது சொந்த கருத்துகள் என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், வருடந்தோறும் சென்னையில், பெருநகர காவல்துறையின் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வரும் அமைப்பினருடன் காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கலந்தாய்வு கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் இணை ஆணையாளர்கள் எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி (தெற்கு மண்டலம்), பி.சாமூண்டிஸ்வரி (வடக்கு மண்டலம்) மற்றும் காவல்துறை அதிகாரிகள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா காட்சி,பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 29 அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கலந்தாய்வில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.

சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்/ விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.இக்கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் உத்தரவுப்படியும், விதிகளை பின்பற்றி, போலீசார் அனுமதிக்கும் நாட்களில், விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீரில் கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!