மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய நடைமுறையில் பாஸ்போர்ட் ’ வரலாறு படைத்தது பாகிஸ்தான்…!
மனித சமூகத்தில் ஆண்பால், பெண்பால் உடன் மூன்றாம் பாலினத்தவர்களும் வாழ்ந்து வருகின்றன. ஆனால் அவர்களுக்கான உரிமைகள் தான் சரியாக கிடைப்பதில்லை. அதிலும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகம் நிறைந்த பாகிஸ்தானில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகைகள் எதிர்பார்ப்பது சற்று சிரமம். அதற்காக அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு பலனாக, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். அந்நாட்டு அரசு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அவர்களின் பாலினப் பகுதியில் ’X’ என்று குறிப்பிடப்படுகிறது.

மூன்றாம் பாலின கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஃபர்ஸானா ஜானிற்கு தான், முதல் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் முதல்படி என்று குறிப்பிட்டுள்ளார். வெளி உலகைக் காண தங்களுக்கும் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் அதற்கான சரியான வழிமுறைகள் வகுக்காததால் சிரமம் நீடித்து வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு, அந்நாட்டின் தேசிய அடையாள அட்டையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடம்கிடைத்தது. 2017ல் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டனர்.


