எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’- ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு!

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’- ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு!

’இந்தியா’ கூட்டணி  ஆலோசனைக் குழு மும்பையில் இரண்டு நாட்களாக நடந்தி வந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின்  ஒருங்கிணைப்பு குழுவில் மு.க. ஸ்டாலினும் பிரச்சாரக் குழுவில் திருமாவளவனும் இடம்பிடித்துள்ளனர்.

மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி, அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கா விரைவில் அதன் உறுப்பினர்களிடையே சீட் பகிர்வு ஃபார்முலாவை வெளியிடும் என்று கூறியுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற மத்திய அரசின் சமீபத்திய முன்மொழிவைச் சுற்றியுள்ள அரசியல் குழப்பத்துக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் வலிமை ஆளும் அரசாங்கத்தை பதட்டமடையச் செய்கிறது என்று கூறினார். இந்த அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியலால் வரும் மாதங்களில் மேலும் தாக்குதல்கள், அதிக சோதனைகள் மற்றும் கைதுகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறினார்.

இன்று காலை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழுவை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும். இதற்கிடையில், எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டனி அதன் அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளியிடும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணியின் தலைவர் சஞ்சய் ராவத்தின் கருத்துப்படி, சில தலைவர்கள் ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் சொந்த கட்சி தேர்தல் சின்னம் இருக்கும்போது பொதுவான சின்னத்தின் தேவை குறித்து ஆட்சேபனைகளை எழுப்பினர் என்று கூறினார்.

பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியின் சுமார் 28 கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கேமராக்களுக்கு போஸ் கொடுத்தனர். மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதிநிதிகள் புகைப்பட அமர்வு இடம்பெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், என்.சி.பி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுத் தலைவர்கள் பரூக், உமர் அப்துல்லா, வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிகழ்ச்சியின்படி, லோகோ இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது, ஆனால், இப்போதைக்கு இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் குழு, 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான சீட்-பகிர்வு சூத்திரத்தை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளது.

“இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முடிந்தவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இதன் மூலம் தீர்மானித்துள்ளோம். பல்வேறு மாநிலங்களில் சீட் பகிர்வு ஏற்பாடுகள் உடனடியாக தொடங்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல் ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கப்படும்” என்று தீர்மானம் வாசிக்கப்பட்டது.

மேலும், “பொது அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், வெவ்வேறு மொழிகளில் ‘ஜுடேகா பாரத், ஜிதீக இந்தியா’ என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய தகவல்தொடர்புகள் மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க இதன் மூலம் தீர்மானிக்கிறோம்” என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்: 1. கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), 2. சரத் பவார் (என்.சி.பி.), 3. மு.க. ஸ்டாலின் (தி.மு.க), 4. சஞ்சய் ராவத் ( சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி), 5. தேஜஸ்வி யாதவ் (ஆர்.ஜே.டி), 6. அபிஷேக் பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்), 7. ராகவ் சாதா (ஆம் ஆத்மி கட்சி), 8. ஜாவேத் அலி கான் (சமாஜ்வாடி கட்சி), 9. லலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), 10. ஹேமந்த் சோரன் (ஜே.எம்.எம்), 11. டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 12. உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), மற்றும் 13. மெஹபூபா முஃப்தி (பி.டி.பி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதே போல, இந்தியா கூட்டணி 19 பேர் கொண்ட பிரச்சாரக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இடம்பெற்றுள்ளார்.

இந்தியா கூட்டணியின் பிரச்சாரக் குழு உறுப்பினர்கள்:

குர்தீப் சிங் சப்பல், காங்கிரஸ்
சஞ்சய் ஜா, ஐக்கிய ஜனதா தளம்
அனில் தேசாய், எஸ்.எஸ்
சஞ்சய் யாதவ், ஆர்.ஜே.டி
பி.சி சாகோ, என்சிபி
சம்பை சோரன், ஜே.எம்.எம்
கிரண்மோய் நந்தா, எஸ்பி
சஞ்சய் சிங், ஆம் ஆத்மி
அருண்குமார், சி.பி.ஐ.
பினோய் விஸ்வம், சி.பி.ஐ
ஹஸ்னைன் மசூதி, தேசியவாத காங்கிரஸ்
ஷாஹித் சித்திக், ஆர்.எல்.டி
என்.கே. பிரேமச்சந்திரன், ஆர்.எஸ்.பி
ஜி. தேவராஜன், ஏ.ஐ.எஃப்.பி
ரவி ராய், சி.பி.ஐ (எம்.எல்)
திருமாவளன், வி.சி.க
கே.எம்.காதர் மொய்தீன், த.மு.மு.க
ஜோஸ் கே.மணி, கே.சி(எம்)
டி.எம்.சி கட்சிக்கு பின்னர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டம் முடிந்த பிறகு  பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி, அதை குறிப்பிட்ட சிலருக்கு மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கம் என காட்டமாக விமர்சித்தார்.

இந்திய நிலத்தை சீனர்கள் கைப்பற்றியுள்ளனர். லடாக்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இது தேசிய முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவங்களை பத்திரிகைகள் வெளியிடுவதில்லை என்றும் ராகுல் காந்தி சாடினார். அவர், “ இந்தக் கூட்டத்தில் சில சக்திவாய்ந்த முடிவுகளை எடுத்துள்ளோம். தொகுதி பங்கீடு முடிவுகளை விரைவுபடுத்தியுள்ளோம். மேலும் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பாக செயல்பட ஒருங்கிணைப்பு குழு குழுவையும் அமைத்துள்ளோம். பாஜகவை தோற்கடிக்க எங்களது கூட்டணி நெகிழ்ச்சியுடன் செயல்படும். நாட்டின் முன்னேற்றத்தில் ஏழை மக்களை உள்ளடக்கிய தெளிவான வளர்ச்சிப் பாதையை நாங்கள் முன்மொழிவோம்” என்றார்.

அத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இல்லாததால் பிரதமர் மோடி பலன் அடைந்ததாக தெரிவித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணரவில்லை, விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

Related Posts

error: Content is protected !!