லக்கிமேன் – விமர்சனம்!

காமெடி பீஸாக இந்த கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை உபயோகிக்கும் யோகிபாபுவை வைத்து சினிமாத்தனம் இல்லாமல் நம்மில் பலரின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களைக் கோர்த்து பாலாஜி வேணுகோபால் ஒரு சுவையான கதை ரெடி செய்து டைரக்ட் பண்ணி வழங்கி இருப்பதுதான் ‘லக்கிமேன்’.காண்போர் ஒவ்வொருவரின் வாழ்வையும் இப்படத்தின் ஏதாவது ஒரு காட்சியிலாவது தன்னை இணைத்துக் கொள்ளச் செய்கிறது. கூடவே நம்பிக்கை தரும் வசனங்களும் அதிகம் இடம் பெற்றுள்ளன. அதாவது அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டு உழைக்க மறுப்போருக்கு அறிவுரையாகவோ பாடமாகவோ சொல்லாமல் யதார்த்தமாகச் சொல்லி ரசிக்க கூடிய படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.
கதை என்னவென்றால் சின்ன வயதில் இருந்தே தான் தொட்ட இடமெல்லாம் கெட்டதாக நடக்கிறது என்று சொல்லி, தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று எண்ணி வாழ்க்கையை ஓட்டி வருகிறார் நாயகன் யோகி பாபு. இவருக்கும் ரேச்சல் ரபேகா மனைவியாக வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியில் இடைத் தரகராக பணியாற்றி வரும் யோகிபாபு ஒரு ஏழ்மையான வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். நாம் இப்படி இருப்பதற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் யோகிபாபு. அச்சமயத்தில், சிட் பண்ட் நிறுவனத்தில் யோகிபாபு மாத மாதம் பணம் செலுத்தி வருகிறார். அந்த சிட் பண்ட் நிறுவனத்தில் யோகிபாபுவிற்கு குலுக்கல் முறையில் கார் ஒன்று பரிசாக விழுகிறது.,அதை விற்று கடன் களை அடைக்குமாறு மனைவி கூறுகிறார். ஆனால் அந்த கார்தான் தனக்கு அதிர்ஷ்டத்தை தரப்போவதாக முருகன் நம்புகிறார். அதற்கேற்ப ஒரு சில நல்ல செய்திகள் வருகிறது. இந்நிலையில் காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததால் ரோட்டில் நிறுத்துகிறார்.இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தகராறு ஏற்படுகிறது. திடீரென்று முருகனின் கார் திருட்டு போகிறது. அதை இன்ஸ் பெக்டர்தான் திருடி இருப்பார் என முருகன் சந்தேகப்படுகிறார். அதே சமயம் அவரிடமே கார் திருட்டு புகாரும் தருகிறார். மேலும் அவர் செல்லமாக வளர்க்கும். நாய் ஒன்றையும்.திருடி வருகிறார். முருகனுக்கு கார் திரும்ப கிடைத்ததா? இல்லையா? என்பதற்கு பதில் சொல்வதுதான் லக்கிமேன்.
நாயகனாக வரும் யோகிபாபு. எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் எதார்த்தமான பேச்சு மற்றும் நடிப்பால் கிடைத்த கேரக்டருக்கு வெயிட் ஏற்றி விடுகிறார். பரிசாக கிடைத்த காரை பார்க்கிங் செய்ய இடமில்லாமல் தான் குடியிருக்கும் தெருவில் வெவ்வேறு இடங்களில் நிறுத்துவதும் ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் வீரா வந்து அந்த காரை அப்புறப்படுத்த முயலும் போது அவருடன் சண்டை போட்டு விலலங்கத்தை ஆரம்பித்து. அவர்களுக்குள் நடக்கும் மோதல் போக்கு லக்கி மேன் கதையை சுவையாக கொண்டு செல்கிறது. வீரா வளர்க்கும் செல்ல நாயை யோகிபாபு கடத்தி வந்து நண்பன் அப்துல் வீட்டில் வைப்பதும் அந்த நாயின் கழுத்தில் ஜிபிஎஸ் இருப்பதாக கூறி வீரா நாயை கண்டுபிடிக்க புறப்படுவதும் கூடவே யோகியும் செல்வதெல்லாம் அடடே சொல்ல வைக்கிறது..
ரொம்ப நல்ல போலீசாக வரும் வீரா கிடைத்த கேரக்டருக்குரிய விரைப்புடன் மிகச் சரியாக் நடித்து கவனம் பெறுகிறார்.. யோகிபாபு ஒய்ஃப்பாக வரும் ரெய்ச்சல் குடும்ப சூழலை உணர்த்த யோகியுடன் மல்லு காட்டும்போது சராசரி குடும்ப பெண்ணாகவே மாறி அசத்துகிறார்.. ஆனால் அவரை விட்டு ஒரு சூழலில் பிரிந்து செல்வது ஓட்டவே இல்லை.. !
ஹீரோ நண்பன் ரோலில் வரும் அப்துல் லீ. கேரக்டர் சூப்பர். யோகியின் மகனாக வரும் சாத்விக் ஜூனியர் யோகி பாபுவாக மாறி கலக்குகிரார். மற்ற நட்சத்திரங்களும் கதையின் சுவாரஸ்யத்துக்கு தங்கள் பங்களிப்பை சரியாக வழங்கி இருக்கிறார்கள்..
குறிப்பாக வசனங்கள் பெரிதாகவே கவனம் ஈர்த்தன. “நல்லவனா இருந்தா நல்லவனாகத்தான் இருக்க முடியும், நல்லா இருக்க முடியாது” என்ற வாழ்க்கையின் நடைமுறை தத்துவத்தை விளக்கிச் சென்றிருக்கிறார் இயக்குனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவும் பர்ஃபெக்ட்.
மொத்தத்தில் இந்த லக்கிமேன் – காண்போரை கவர்கிறான்
மார்க் 3.5/5 .