‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

விஷ்ணு விஷால் & ராகுல் தயாரிப்பில் ருத்ரா, மிதிலா பால்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இப்படத்தின் நாயகன் ருத்ரா என்பதும் அவர் விஷ்ணு விஷாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், நடிகர் கார்த்தியை அண்ணன் சூர்யா எப்படி திரையுலகில் நாயகனாக அறிமுகப்படுத்தி, இன்று வரை அவரது வளர்ச்சியில் துணை நிற்கிறாரோ, அதுபோல் நடிகர் விஷ்ணு விஷாலும் தனது தம்பி ருத்ராவை ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் ருத்ராவுடன், மிதிலா பால்கர், மிஷ்கின், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது . இதை அடுத்து இப்படக்குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட சேதியிதோ; .

நடிகர் விஷ்ணு விஷால் சொன்னது, “ருத்ரா என் பெரியப்பா பையன். ஆனாலும் நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் என்னுடைய சொந்தத் தம்பி போலவே வளர்ந்தான். நல்ல திறமைசாலி – உழைப்பாளி.என் தம்பியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் நீண்ட நாள் திட்டம், அதற்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும் என்பதால் இதன் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். இது முழுக்க முழுக்க காதல் கதை. என் படங்களில் காதல் இருந்தாலும், முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட படங்களில் நடித்ததில்லை. ஆனால், என் தம்பி முதல் படத்திலேயே ஒரு காதல் கதையில் அறிமுகமாவது மகிழ்ச்சி.இந்த படத்தில் நான் நடிகர் விஷ்ணு விஷாலாகவே நடிக்கிறேன். ருத்ரா உதவி இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கிறார். நான் ஆக்‌ஷன், திரில்லர் ஜானர் படங்களில் நடித்திருந்தாலும் காதல் கதைகளில் நடிக்கவில்லை. அதனால் எனக்கு ஒரு காதல் கதை படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை, அந்த நேரத்தில் எனக்கு வேறு ஒரு ஜானர் கதையை சொல்ல வரும் உதவி இயக்குநரான ருத்ரா, என் ஆசையை தெரிந்துக் கொண்டு எனக்காக ஒரு காதல் கதையை எழுதுகிறார், அதன் பிறகு என்ன ஆனது என்பதை முழுமையான காதல் படமாக சொல்வது தான் ‘ஓஹோ எந்தன் பேபி’.

இந்த கதையை நான் சில வருடங்கள் முன்பு கேட்டேன், எனக்கு ரொம்ப பிடித்தது. ஆனால், அதில் என்னால் நடிக்க முடியாது என்பதால், கதையை மட்டும் நாங்க வாங்கி வைத்துக் கொண்டும். ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்த இந்த கதை சரியாக இருக்கும் என்பதால் இதை தயாரிக்க முடிவு செய்தேன். இதில் ஒரு நடிகர் கதாபாத்திரம் இருக்கிறது. வெளியே போய் கேட்பதை விட, நானே செய்துவிடலாம் என்று தோன்றியது. அதனால் நானே நடித்து விட்டேன், படம் முழுவதும் வருகிறேன். எனக்கு இது முதல் காதல் படம் என்பதால் எனக்கும் புது அனுபவமாக இருக்கும். ருத்ராவுக்கு ஒரு காதல் இருக்கும், எனக்கு ஒரு காதல் இருக்கும், ருத்ராவின் அம்மா – அப்பா கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு காதல் இருக்கும் இப்படி படம் முழுவதுமே காதல் மற்றும் பொழுதுபோக்கான அம்சங்கள் நிறைந்திருக்கும். அதனால், இது முழுவதுமான ஒரு காதல் படமாக இருக்கும். ருத்ராவுக்கு இந்த கதை மிக பொருத்தமாக இருக்கும். அவர் இயல்பாகவே துறுதுறுவென்று இருப்பார் என்பதால் அவருக்கு காதல் கதை மிக பொருத்தமாக இருக்கும். நான் இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் ஒரு படத்தில் கூட எனக்கு முத்தக் காட்சிகள் அமைந்ததில்லை, ஆனால் ருத்ராவுக்கு முதல் படத்திலேயே மூன்று முத்தக் காட்சிகள் அமைந்திருக்கிறது.” என்றார்.

டைரக்டர் கிருஷ்ணகுமார் ராம்குமார் சொன்னது,

”முகேஷ் மஞ்சுநாத் என்பவரது கதை இது, நான் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன். விளம்பர படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்ததால் திரைப்படம் இயக்குவது காலதாமதமாகி விட்டது. ’மாடர்ன் லவ்’ படத்தில் நான் ஒரு எப்பிசோட் இயக்கியிருந்தேன், அதை பார்த்துவிட்டு தான் விஷ்ணு என்னை அழைத்தார். இந்த கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. இந்த தலைப்பும் விஷ்ணு தான் சொன்னார். அவர் முதல் முறை தலைப்பு சொன்ன போதே எனக்கு பிடித்துவிட்டது. ருத்ராவுக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும். இந்த கதையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வது என்று நாயகன் மூன்று காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிக்காட்ட வேண்டும், அதற்கு ருத்ரா மிக சரியானவராக இருந்தார். அவரது முகத்தில் மூன்று விதமான காலக்கட்டத்தின் வளர்ச்சியை காட்டுவது எனக்கு எளிதாக இருந்தது. எனவே, இந்த படம் ருத்ராவுக்கு மிகச்சரியான அறிமுகமாக இருக்கும்.” என்றார்.

நாயகனாக அறிமுகமாகும் ருத்ரா சொன்னது,

“சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் திட்டம். அண்ணன் நடிகரான போது எங்களுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. அப்போதே நடிப்பு தான் என்று முடிவு செய்து விட்டேன். ஆனால், சினிமாவைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பிறகு அண்ணனின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு பணியையும் கவனித்து வந்தேன். அதன் மூலம் சினிமா மீதான் புரிதல் இருக்கிறது.
நடிகராக வேண்டும் என்பது தான் என் நோக்கம், அதே சமயம் சினிமாவைப் பற்றி பிராக்டிக்கலாக தெரிந்துகொள்வதற்காக தான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஆனால், உதவி இயக்குநராக வேலை செய்த போது எனக்குள் படம் இயக்கும் ஆசையும் வந்து விட்டது. சில கதைகள் எழுதினே, அதை வெவ்வேறு வடிவில் எழுதி, அண்ணனிடமும் சொல்ல்வேன், இப்படி இயக்குநர் ஆசை என்னை அறியாமலேயே என்னுள் வந்துவிட்டது, அதனால் எதிர்காலத்தில் நிச்சயம் படம் இயக்கவும் செய்வேன்.” என்றார்.

இப்படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக மிதிலா பால்கர் நடித்திருக்கிறார். சமூக வலைதள பிரபலமான இவருக்கு இது தான் முதல் படம் என்றாலும் இவரது திரை இருப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று இயக்குநர் கிருஷ்ணகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின், கஸ்தூரி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை, அருண் குரியன், விஜயசாரதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.ஜென் மார்டின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.சி.பிரணவ் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். முகேஷ் மஞ்சுநாத் கதை எழுத, சாரதா மற்றும் முகேஷ் மஞ்சுநாத் இணைந்து கூடுதல் வசனம் மற்றும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அஹிக் ஏ.ஆர், கார்த்திக் நேதா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் ‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தை அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

error: Content is protected !!