தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு- முழு விபரம்!

தமிழகத்தில்  2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு- முழு விபரம்!

மிழ்நாட்டில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும், இதற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த ஓராண்டு செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வில் பங்கேற்க வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை https://www.trb.tn.gov.in/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ் – 394, ஆங்கிலம் – 252, கணிதம் – 233, இயற்பியல் – 292, வேதியியல் – 290, தாவரவியல் – 131, விலங்கியல் – 132, வரலாறு – 391 மற்றும் புவியியல் – 106 என தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெற உள்ளது.

இதனிடையே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில், ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2013ம் ஆண்டில் இருந்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பலரும், தங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், பணிகளில் சேர முடியாத நிலை இருப்பதாக தெரிவித்திருந்தனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஏற்கெனவே இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தமிழில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2012 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5.5 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும். 2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்ணும், 2014-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4.5 மதிப்பெண்ணும் வழங்கப்படும். 2017-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். 2019 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும். 2022-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 0.5 வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!