ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த தினமும் 25.6 கோடி செலவு.! -இஸ்ரேல் நிதியமைச்சர் தகவல்.!

ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த தினமும் 25.6 கோடி செலவு.! -இஸ்ரேல் நிதியமைச்சர் தகவல்.!

ஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே யுத்தம் 19-வது நாளாக நீடித்து வருகிறது. ஹமாஸின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி காசா மீது அடுத்தடுத்து வான்வெளி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதால் பாலஸ்தீனம் கான்கிரீட் குவியலாக மாறி வருகிறது. இதில் ஹமாஸ் போராளிகளுடன் பச்சிளம் குழந்தைகள் உட்பட எண்ணெற்ற அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் காசாவின் 400 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதில் 350 குழந்தைகள் உட்பட 700 பேர் கொல்லப்பட்டு இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இருந்தும் இஸ்ரேல், காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது மேற்கு கரை, காசா மற்றும் வடக்கு பகுதிகளில் இஸ்ரேல் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா கடற்கரை பகுதியில் சுரங்கப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே காசா மக்களுக்கு தேவையான எரிபொருள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் எடுத்து செல்வதில் சிரமம் நீடிக்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சாரமின்றி காசா மருத்துவமனைகள் இருளில் மூழ்கியுள்ளன. இங்குபேட்டரில் உள்ள குழந்தைகள், அவசர சிகிச்சையில் உள்ளவர்களின் நிலையும் கேள்வி குறியாகி இருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு செல்போன் வெளிச்சத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் சோக காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் போர் நிறுத்தத்திற்கு முரண்டு பிடிக்கும் இஸ்ரேல் அரசு ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு அயுதத்திற்கு இணையான 12,000 டன் வெடி பொருட்கள் பயன்படுத்தி உள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு இதுவரை ரூ.37.350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார். அதன்படி, இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 1 பில்லியன் ஷேக்கல்கள் ($246 மில்லியன் அல்லது ரூ.24.6 கோடி) போருக்கான நேரடிச் செலவு என்று தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதால், இதனை சரி செய்ய அதிக செலவு ஆகும். இதனால் காசா போரைக் கருத்தில் கொண்டு 2023-2024 தேசிய வரவுசெலவுத் திட்டம் இனி பொருந்தாது என்றும் அந்த திட்டம் திருத்தப்படும் என்றும் இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறினார். இதற்கு மத்தியில் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!