நிதி ஆயோக் கூட்டம் 2025 – முழு விபரம்!

நிதி ஆயோக் கூட்டம் 2025 – முழு விபரம்!

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட  நிதி ஆயோக் 2015ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது.நிதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரிபுரா முதலமைச்சர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மத்திய மாநில அரசுகள் டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல” என்று கூறியுள்ளார். அத்துடன் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடையும் போது தேசமும் வளர்ச்சி அடைந்ததாக மாறும் என்று கூறிய அவர், “ஒவ்வொரு இந்தியரும் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை இலக்காக வைத்து அதை நோக்கியே முன்னேற வேண்டும்.ஒவ்வொரு மாநிலமும் சுற்றுலா வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது உலக தரத்திற்கு இணையாக அனைத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளுடன் ஒவ்வொரு மாநிலமும் குறைந்தபட்சம் ஒரு சுற்றுலா தலத்தையாவது உருவாக்க வேண்டும். இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் நகரங்களை நோக்கி நாம் பாடுபட வேண்டும். சாதாரண குடி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் நாம் செயல்பட வேண்டும். 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஒரு குழுவாக செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதில் பங்கேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது: “பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். எங்களது அரசில் 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, செயலாற்றி வருகிறோம். அதன் பயன்கள்தான் புள்ளிவிவரங்களாக, வளர்ச்சிக் குறியீடுகளாக எதிரொலிக்கின்றன. குறிப்பாக, அண்மைக்காலங்களில் ஆண்டுதோறும் 8 விழுக்காட்டுக்கும் மேலான வளர்ச்சி. கடந்தாண்டு நாட்டிலேயே அதிகமாக 9.69 விழுக்காடு வளர்ச்சி என்ற பாய்ச்சலில், இந்திய விடுதலையின் நூற்றாண்டில் (2047-ல்), 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற சவாலை எங்கள் முன் வைத்துக்கொண்டு உழைத்து வருகிறோம். இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், எங்களது பங்களிப்பு வலுவாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் தொழில்மயமாகியுள்ளது. ஆட்டோமொபைல் முதல் பசுமை ஹைட்ரஜன் வரை, அனைத்து வளர்ந்து வரும் துறைகளிலும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 விழுக்காட்டு பெண் பணியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். நகரமயமாக்கலில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது!அதிகரித்து வரும் இந்த நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள், நல்ல உட்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வழங்குவது நம்முடைய கடமை. நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். ‘அம்ருத் 2.O’ திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவையாகும். இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

‘சுத்தமான கங்கை’ திட்டம் கங்கை நதியை மேம்படுத்துவதிலும், மீட்டெடுப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஆறுகள் நமது நாட்டின் உயிர்நாடியாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க இதேபோன்ற திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும்.இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள். 2047-ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது. கடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பிரதமர், ‘மாநிலங்கள் மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதால், இந்தத் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் மாநிலங்கள் தீவிர பங்கு வகிக்கின்றன’ என்று பேசியிருந்தார்.அவரது தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, கூட்டுறவு கூட்டாட்சி என்பது அவசியமான அடித்தளமாகும். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், SSA நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் மத்திய நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்குமாறு நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும். கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசும் – மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை, தொடர்ந்து உயர்ந்து வருவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். மறுபுறம், மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.எனவே, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து மக்களும் வளமுடன் வாழ்ந்திடும் வகையில், அனைத்து பண்பாடுகளும் செழித்திடும் வகையில், பன்முகத்தன்மை கொண்ட வலிமையான நாடாக இந்தியா திகழ்ந்திட, தமிழ்நாடு தனது சிறந்த பங்களிப்பை என்றும் வழங்கிடும்.தற்சார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். அதற்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

புறக்கணித்த முதல்வர்கள்

ஏற்கனவே அறிவித்தப்படி நிதி ஆயோக் கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர். மேலும் கேரளம், புதுச்சேரி மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் அறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் இந்த நிதி ஆயோக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அதே சமயம் இந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “பள்ளி கல்வித்துறைக்கான SSA நிதியை பெறுவது, கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்குவது, சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைக்க வேண்டும்,செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழி சாலையாக மாற்ற வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சாதிப்பெயர் விகுதிகளை மாற்றுவது,கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன்.இந்தக் கூட்டம் முடிந்தபிறகு பிரதமர் மோடியை ஐந்து நிமிடங்கள் சந்தித்து இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினேன். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மோடி உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.

வெள்ளைக் கொடி ஏந்தி ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் இருப்பது போன்று காவி கொடியும் இல்லை” என்றார்.டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “இதெல்லாம் பித்தலாட்டம், பொய். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்று அதிகமாக அவதூறு பரப்புவார்கள். அதையெல்லாம் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி சந்திப்பு பற்றி பேசிய ஸ்டாலின், “எப்போதெல்லாம் டெல்லி வருகிறேனோ, அப்போதெல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திப்பது வழக்கம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதேநேரத்தில் அரசியலும் பேசினோம்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!