நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு!

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு!

இந்தியாவையும் தாண்டி உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளக்கிய நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்ட நிலையில் புதிய தேதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட இருந்தது. ஆனால், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், கருணை காட்டுமாறு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினான். இந்த கருணைமனுவை நிராகரிக்குமாறு டெல்லி மாநில அரசு, துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது.

டெல்லி துணை நிலை ஆளுநரும், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்குப் பிறகு கருணை மனு, நேற்றிரவு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இந்த தகவல் கருணை மனு போட்ட முகேஷ் சிங்கிற்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜனவரி 22ஆம் தேதிக்குப் பதிலாக, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. கருணை மனு நிராகரிக்கப்பட்டாலும், 14 நாட்கள் நோட்டீசுக்குப் பிறகு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குற்றவாளிகள் நான்கு பேரும் திஹாரில் சிறை எண் நான்கிற்கு மாற்றப்பட்டுள்ளனர். தூக்கு மேடை அங்கு தான் உள்ளது என்தால் நான்கு பேரையும் சிறை எண் நான்கில் தனித்தனி அறையில் அடைத்து கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!