கொரோனா : டெல்லியில் இரவு நேர ஊரடங்கு – உடனடி அமல்!
![கொரோனா : டெல்லியில் இரவு நேர ஊரடங்கு – உடனடி அமல்!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/04/delhi-corona-apr-6a.jpg)
இந்திய தலை நகர் டெல்லியில் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கியதைத் தொடர்ந்து, இன்று முதல் ஏப்ரல் 30 ந்தேதி வரை, இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் இதுவரை 12,686,049 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 165,577 பேர் கொரொனாவால் உயிழிந்துள்ளனர். அதிலும் டெல்லியில் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கிய நிலையில், ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் இரவு 10 மணி தொடங்கி காலை 5 மணி வரையில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள், பயணச்சீட்டு வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவர். நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி டெல்லியில் 3,548 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.