கேரள கவர்னர் உரை :1.17 நிமிடத்தில் நிறைவு செய்து அதிர்ச்சி!

கேரள கவர்னர் உரை :1.17 நிமிடத்தில் நிறைவு செய்து அதிர்ச்சி!

கேரள சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் கேரள சட்டப்பேரவை கூடியது. அப்போது கவர்னர் ஆரிப் முகமது கான் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை. அதாவது 1.17 நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தார். 136 பக்கங்கள் கொண்ட ஆளுநர் உரையின் கடைசி பக்கத்தை மட்டும் படித்துவிட்டு அரசின் கொள்கை திட்டங்களை வேண்டும் என்றே வாசிக்காமல் தவிர்த்துள்ளார். கவர்னரின் செயலால் கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது..!

நம் தமிழகத்தைப் போலவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், கேரளா அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் ஆளுநருக்கும், அரசுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே கேரளா சட்டமன்ற கூட்டுத்தொடர் இன்று முதல் வருகின்ற 27-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் நாள் கொள்கை அறிக்கை தொடர்பாக கவர்னர் வாசிக்கும் நிகழ்வு நடைபெறும் என கூறப்பட்டது. இதைத்தொடந்து, இன்று சட்டமன்ற வாசலில் பூங்கொத்துகளுடன் கவர்னருக்காக முதல்வர் மற்றும் சபாநாயகர் காத்திருந்தனர். கவர்னர் உரிய நேரத்தில் வந்து முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் இருந்து பூங்கொத்துகளை பெற்றுக்கொண்டார். ஆனால், முதலமைச்சரின் முகத்தைப் பார்க்கவோ, புன்னகையைப் பரிமாறிக்கொள்ளாமல் ​​ஆளுநர் கைகுலுக்கிவிட்டு சட்டமன்றத்திற்குள் சென்றார்.

அதே சமயம் கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உரையாற்றும் போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தனது உரையை சுருக்கி கொண்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார்.அதாவது சபையில் இருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த ஆளுநர்” 15-வது கேரள சட்டமன்றத்தின் 10-வது கூட்டத் தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கேரள மக்களின் பிரதிநிதிகளின் இந்த உயரிய குழுவில் உரையாற்றுவது எனது மரியாதை. இப்போது கடைசிப் பத்தியைப் படிப்பேன்” என கூறி கடைசி பத்தியை மட்டும் வாசித்தார்.

இதனால் கேரளா கவர்னர் சபை கூட்டுத்தொடரில் 1.17 நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்து தனிச் சாதனைப் படைத்து விட்டார். கவர்னரின் இந்த செயலால் கேரளா சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 136 பக்கங்கள் கொண்ட கொள்கை அறிக்கையின் 135 பக்கங்களை கவர்னர் புறக்கணித்து விட்டார் என்பதால் கேரளா கவர்னர் நாளை அளிக்கும் குடியரசு தின விருந்தில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

error: Content is protected !!